பக்கம் எண் :

384ஆரணிய காண்டம்

விஞ்சை வேந்தர் சுற்ற, சித்தர் சேர, கின்னரர் இறைஞ்ச, உரகர் சூழ,
தும்புரு ஏத்த, நாரதன் வார்க்க, வருணன் சிந்த, சமீரணன் துடைப்ப, வியாழ
வெள்ளிகள் இருக்கை ஈய, காலன் நாழிகைக் கணக்குக் கூற, அக்கினி
விளக்கேற்ற, கற்பகத்தரு முதலியன செல்வம் நீட்ட, அணிகள் இருளை
ஓட்ட, கடவுட் கன்னியர் வாழ்த்த, ஊர்வசி முதலியோர் ஆட, இராவணன்
தோளும் குண்டலமும் ஒளி வீச, மகுடம் பிரகாசிக்க, ஆரம் குலவ, கழல்
ஆர்ப்ப, மலர்க்குப்பை துன்ன, மண்டபம் பொலிய, பார்வை வெள்ளத்து
வீற்றிருந்தான் என முடிக்க.                                    23

சூர்ப்பணகையின் வருகை கண்ட இலங்கையர் துயரம்

3090. தங்கையும், அவ் வழி,
     தலையில் தாங்கிய
செங் கையள், சோரியின்
     தாரை சேந்து இழி
கொங்கையள், மூக்கிலள்,
     குழையின் காதிலள்,
மங்குலின் ஒலி படத்
     திறந்த வாயினள்,

    அவ்வழி - அவ்விடத்தில் (அந்நேரத்தில்); தங்கையும் -
(இராவணன்) தங்கையாகிய சூர்ப்பணகையும்; தலையில் தாங்கிய
செங்கையள் -
தலை மேல் சுமந்த சிவந்த கையை உடையவளும்;
சோரியின் தாரை - இரத்த வெள்ளத்தால்; சேந்து இழி கொங்கையள் -
சிவந்து பெருகும் மார்பை உடையவளும்; மூக்கிலள் - மூக்கை
இழந்தவளும்; குழையின் காதிலள் - குழையணிந்த காதுகளை
இழந்தவளும்; மங்குலின் ஒலிபட - மேகத்தின் இடி முழக்கம்
தோற்கும்படி; திறந்த வாயினள் - ஓலமிட்டுத் திறந்த வாயை
உடையவளும்.

     கொங்கை, மூக்கு, காது ஆகிய உறுப்புக்களை இலக்குவனால் இழந்த
நிலை கூறப்படுகிறது. பொருள் அடுத்த பாடலில் முடிகிறது.24

3091.முடையுடை வாயினள், முறையிட்டு,
     ஆர்த்து எழு
கடையுகக் கடல் ஒலி
     காட்டக் காந்துவாள்,
குட திசைச் செக்கரின்
     சேந்த கூந்தலாள்,
வட திசை வாயிலின்
     வந்து தோன்றினாள்.

    முடையுடை வாயினள் - முடை நாற்றம் வீசும் வாயினால்;
முறையிட்டு ஆர்த்து - தன் குறையை உரக்கக் கூவுகின்றவளும்; எழு