பக்கம் எண் :

390ஆரணிய காண்டம்

அரக்கர் மாதர்; நிரை வளைத் தளிர்க் கரம் - வளையல் வரிசைகள்
பூண்ட தளிர்போன்ற மென் கரங்களை; நெரித்து நோக்கினர் - பிசைந்த
கோலத்தில் (சூர்ப்பணகையை) உற்று நோக்கினர்; பிரை உறு பால் என -
பிரை குத்திய பாலைப் போல; நிலையின் பின்றிய உரையினர் - இயல்பு
குலைந்த தடுமாறிய உரையினராக; ஒருவர் முன் ஒருவர் ஓடினார் -
(யாது நேருமோ என அஞ்சி) ஒருவருக்கு முன் ஒருவராக ஓடிச் சென்றனர்.

     கரைதல் சொல்லுதல் எனக் கொண்டு கரை அரு திருநகர் : புகழை
எடுத்துச் சொல்லுதலுக்கு அரிய செல்வ நகர் எனவும் கொள்ளலாம். (கரை-
முதனிலைத் தொழிற் பெயராகக் கொள்ளின் இப் பொருளாம்).         35

3102.முழவினில், வீணையில்,
     முரல் நல் யாழினில்,
தழுவிய குழலினில்,
     சங்கில், தாரையில்,
எழு குரல் இன்றியே,
     என்றும் இல்லது ஓர்
அழு குரல் பிறந்தது, அவ்
     இலங்கைக்கு அன்றுஅரோ.

    அவ் இலங்கைக்கு - அந்த இலங்கை மாநகருக்குத் (தீ நிமித்தமாக)
; முழவினில் வீணையில் - மத்தளம், வீணைகளிலிருந்து; முரல் நல்
யாழினில் -
இசைக்கும் இனிய யாழிலிருந்து; தழுவிய குழலினில் - தன்
வசமாக்கும் புல்லாங்குழலிலிருந்து; சங்கில் தாரையில் - சங்கு, எக்காளம்
ஆகியவற்றிலிருந்து; எழு குரல் இன்றியே - எப்போதும் எழுகிற மங்கல
ஒலி வாராது; என்றும் இல்லது ஓர் அழு குரல் - இதுவரை கேட்காத
அழுகை ஓசையானது; அன்று பிறந்தது - அப்பொழுது தோன்றி ஒலித்தது;
அரோ - அசை.

     இன்னிசை முழங்கிய நகரில் அமங்கல அழுகை ஒலி கேட்கலாயிற்று.
தீ நிமித்தம் கூறியவாறு.                                       36

3103.கள்ளுடை வள்ளமும்,
     களித்த தும்பியும்,
உள்ளமும், ஒரு வழிக்
     கிடக்க ஓடினார்;-
வெள்ளமும் நாண் உற
     விரிந்த கண்ணினார்-
தள்ளுறும் மருங்கினர், தழீஇக்
     கொண்டு ஏகினார்.