நெய்ந்நிலைய வேல் அரசன் - நெய் பூசி அழகு செய்யப் பெற்ற வேலேந்திய அரசனும்; நேருநரை இல்லான் - தனக்கு எதிராக நிற்பார் எவரும் இல்லாதவனும் (ஆகிய இராவணன்); இந்நிலை உணர்ந்த பொழுது- (சூர்ப்பணகைக்கு உற்ற) இக் கொடிய நிலையினை அறியுங்கால்; எந்நிலையம் என்னா - எத்தகைய மனநிலை கொள்ள நேருமோ என்று; மைந்நிலை நெடுங்கண் - மை நிலைபெற்ற தம் பெரிய கண்களில்; மழை வான் நிலையது ஆக - பொழியும் கண்ணீர் மேகம் சொரியும் மழையை நிகர்த்ததாக; பொய்ந் நிலை மருங்கினர் - பொய்யோ என்னும் இடை படைத்த பெண்கள்; புலம்பினர், புரண்டார் - அழுது கீழே விழுந்து புரண்டனர். இடையின் மென்மையை உயர்வு நவிற்சியாகப் பொய்யான இடை என்று மொழிந்தார். (3606 வரையிலும் உள்ளது போலவே 3107 முதல் 3128 முடியுமளவு உள்ளனவும் கலிவிருத்தங்களே எனினும் சீரின் அசைகள் வேறு அமைப்புடையன). 41 | 3108. | மனந்தலை வரும் கனவின் இன் சுவை மறந்தார்; கனம் தலை வரும் குழல் சரிந்து, கலை சோர, நனந் தலைய கொங்கைகள் ததும்பிட, நடந்தார்;- அனந்தர் இள மங்கையர்- அழுங்கி அயர்கின்றார். |
அனந்தர் இள மங்கையர் - துயில் கொண்டிருந்த இளம் பெண்கள் சிலர்; மனம் தலை வரும் கனவின் இன்சுவை மறந்தார் - (சூர்ப்பணகையின் அழுகை கேட்டு) மனத்தின் இடத்தே உண்டான கனவினால் விளையும் இனிய இன்பத்தையும் மறந்து போனவர்களாய்; கனம் தலை வரும் குழல் சரிந்து - முகிலென அமைந்த கூந்தல் சரிந்தவர்களாய்; கலை சோர - ஆடை கலைந்தவர்களாய்; நனந் தலைய கொங்கைகள் ததும்பிட - விரிந்தமைந்த மார்பகங்கள் அசைய; நடந்தார் - நடக்கலாயினர்; அழுங்கி அயர்கின்றார் - வருத்தம் ஓங்க மயங்கலாயினர். மனந்தலை - மனத்தலை என்பதன் மெலித்தல் விகாரம். கனம் மேகம் என்னும் பொருளினது. 42 | 3109. | 'அங்கையின் அரன் கயிலை கொண்ட திறல் ஐயன் தங்கை நிலை இங்கு இதுகொல்?' என்று, தளர்கின்றார்; |
|