பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 395

இராவணன் அடிகளில் சூர்ப்பணகை விழுதல்

3111. என்று, இனைய வன்
     துயர் இலங்கைநகர் எய்த,
நின்றவர் இருந்தவரொடு
     ஓடு நெறி தேட,
குன்றின் அடி வந்து படி
     கொண்டல் என, மன்னன்
        பொன் திணி கருங் கழல்
     விழுந்தனள், புரண்டாள்.

    என்று இனைய வன் துயர் - இவ்வாறான பெருந்துயரத்தை;
இலங்கை நகர் எய்த - இலங்கை நகர மக்கள் எய்தவும்; நின்றவர்
இருந்தவரொடு ஓடு நெறி தேட -
அமர்ந்திருந்தவரும், நின்றிருந்தவரும்
ஓடுதற்கு வழி பார்க்கவும்; குன்றின் அடி வந்துபடி கொண்டல் என -
மலையடிவாரம் நாடிச் சேர்ந்த மேகத்திரளைப் போல; (சூர்ப்பணகை) ;
மன்னன் பொன் திணி கருங்கழல் - அரசன் இராவணனுடைய
பொன்னாலாகிய வீரக்கழல் அணிந்த கரிய பாதங்களில்; விழுந்தனள்
புரண்டாள் -
வந்து வீழ்ந்து உருண்டாள்.

     இராவணன் சீற்றம் கொள்ளும் போது தாங்க ஒண்ணாதென ஓடக்
கருதினர் மக்கள். உவமையணி. இராவணன் - குன்று; சூர்ப்பணகை -
கருமேகம். கருங் கழல் - பாதத்துக்கு அன்மொழித்தொகை.45

3112. மூடினது இருட் படலம்
     மூஉலகும் முற்ற;
சேடனும் வெருக்கொடு சிரத்
     தொகை நெளித்தான்;
ஆடின குலக் கிரி;
     அருக்கனும் அயிர்த்தான்;
ஓடின திசைக் கரிகள்;
     உம்பரும் ஒளித்தார்.

    மூஉலகும் முற்ற - மூன்று உலகங்கள் முழுவதிலும்; இருட் படலம்
மூடினது -
இருள் செறிந்து கவிந்தது; சேடனும் - பூமி தாங்கும் ஆதி
சேடனும்; வெருக்கொடு - அச்சம் கொண்டு; சிரத்தொகை நெளித்தான் -
தன் ஆயிரம் தலைகளையும் ஒடுக்கினான்; குலக்கிரி ஆடின - மலைத்
தொகுதிகள் இடம் பெயர்ந்தன; அருக்கனும் அயிர்த்தான் - சூரியனும்
தனக்கு ஏதேனும் கேடு வருமோ என ஐயப்பட்டான்; திசைக்கரிகள் ஓடின-
திக்கு யானைகள் அஞ்சி ஓடின; உம்பரும் ஒளித்தார் - தேவர்களும்
வெருண்டு ஓடி ஒளிந்தனர்.