இராவணன் சினக் கோலம் கருதித் திங்களும், விண்மீன்களும், அக்கினியும் மறைய இருள் சூழ்ந்ததாகவும், அவன் எழுந்த அதிர்ச்சியில் ஆதிசேடன் நெளிந்ததாகவும், காலை மிதித்தூன்ற மலைகள் நடுங்கியதாகவும், அவன் கோபம் எழ சூரியன், திக்கு யானைகள், தேவர்கள் திகைத்து ஒளிந்ததாகவும் கற்பனை செய்தார். குலக்கிரிகள் - கயிலை, இமயம், மந்தரம், விந்தியம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம் என்பன. சேஷன் - அனைத்தும் அழிகிற ஊழியிலும் தான் அழியாது மீதியாய் நிற்பவன். 46 | 3113. | விரிந்த வலயங்கள் மிடை தோள் படர, மீதிட்டு எரிந்த நயனங்கள் எயிறின் புறம் இமைப்ப, நெரிந்த புருவங்கள் நெடு நெற்றியினை முற்ற, திரிந்த புவனங்கள்; வினை, தேவரும், அயர்த்தார். |
விரிந்த வலயங்கள் - ஒளி விரிந்த வாகு வளைகள்; மிடை தோள் படர - பொருந்திய தோள்கள் பொங்கி எழவும்; நயனங்கள் - கண்கள்; மீதிட்டு எரிந்த - நெருப்புக் கிளர்ந்து எரியவும்; எயிறின் புறம் இமைப்ப - பற்கள் வெளித் தோன்றி ஒளிவீசவும்; நெரிந்த புருவங்கள் - வளைந்துயரும் புருவங்கள்; நெடு நெற்றியினை முற்ற - விரிந்த நெற்றியின் மீதேறிச் சேரவும்; (அக்கோபக் காட்சி் கண்டு); புவனங்கள் திரிந்த - உலகங்கள் நிலைகுலைந்தோடின; தேவரும் - தேவர்களும்; வினை அயர்த்தார் - செய்தற்குரிய கடமைகளை மறந்தனர். பொங்கியெழும் தோளும், நெருப்புமிழ் கண்களும், புறத்திடும் பற்களும், உயரும் புருவமும் சின அறிகுறிகள். 'நயனங்கள் எரிந்த' என்ற தொடரில் 'எரிந்த என்ற பலவின் பால் வினைமுற்றை (முற்றெச்சம்) என எச்சமாக்கிப் பொருள் கொள்ளப்பட்டது.47 | 3114. | தென் திசை நமன்தனொடு தேவர் குலம் எல்லாம், இன்று, இறுதி வந்தது நமக்கு' என, இருந்தார்; நின்று உயிர் நடுங்கி, உடல் விம்மி, நிலை நில்லார், ஒன்றும் உரையாடல் இலர், உம்பரினொடு இம்பர். |
|