தென் திசை நமன் தனொடு - தெற்குத் திசையினனாகிய எமனுடன்; 'தேவர் குலம் எல்லாம் - அனைத்துத் தேவர்களும்'; 'நமக்கு இன்று இறுதி வந்தது' - 'நம் எல்லாருக்கும் இன்றோடு முடிவு காலம் வந்துவிட்டது'; என இருந்தார் - என்று கருதினர்; உம்பரினொடு இம்பர் - வானுலகரும் மண்ணுலகரும்; நின்று உயிர் நடுங்கி - அஞ்சி நின்று உயிரும் பதைக்க; உடல் விம்மி - உடல் பெருமூச்செறிந்து; நிலை நில்லார் - ஒரு நிலையில் நிற்க முடியாதவர்களாய்; ஒன்றும் உரையாடல் இலர் - ஏதும் பேசலாற்றாது மௌனம் பூண்டனர். 48 'இப்படிச் செய்தவர் யார்' என இராவணன் கேட்டல் | 3115. | மடித்த பில வாய்கள்தொறும், வந்து புகை முந்த, துடித்த தொடர் மீசைகள் சுறுக்கொள உயிர்ப்ப, கடித்த கதிர் வாள் எயிறு மின் கஞல, மேகத்து இடித்த உரும் ஒத்து உரறி, 'யாவர் செயல்?' என்றான். |
மடித்த - சினத்தால் உதடு அதுக்கிய; பில வாய்கள் தொறும் - மலைக் குகை போன்ற பத்து வாய்களிலும்; வந்து புகை முந்த - சினத் தீயின் புகை பொங்கி வர; துடித்த தொடர் மீசைகள் - கோபத்தால் துடிதுடிக்கும் அடர்ந்த மீசைகள்; சுறுக்கொள உயிர்ப்ப - பொசுங்கி நாறும்படி பெருமூச்சு வெளிப்பட; கடித்த கதிர் வாள் எயிறு - இறுக மென்ற, ஒளி வீசும் கூரிய பற்கள்; மின் கஞல - மின்னல் போல் பிரகாசிக்க; மேகத்து இடித்த உரும் ஒத்த உரறி - முகில்களில் ஓசை செய்து எழும் இடி முழக்கம் போல் பேரொலி செய்து; 'யாவர் செயல்' என்றான் - 'இது யாருடைய செயல்' என்று வினவினான். தங்கை நிலைகண்ட இராவணன் கொண்ட சினமும் கேட்ட வினாவும் இப்பாடலில் அமைந்துள்ளன. 49 | 3116. | 'கானிடை அடைந்து புவி காவல் புரிகின்றார்; மீனுடை நெடுங் கொடியினோன் அனையர்; மேல் கீழ் ஊனுடை உடம்பு உடைமையோர் உவமை இல்லா மானிடர்; தடிந்தனர்கள் வாள் உருவி' என்றாள். |
|