பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 399

சூர்ப்பணகையின் விடை

3116.'மன்மதனை ஒப்பர், மணி
     மேனி; வட மேருத்
தன் எழில் அழிப்பர், திரள்
     தோளின் வலிதன்னால்;
என், அதனை இப்பொழுது
     இசைப்பது? உலகு ஏழின்
நல் மதம் அழிப்பர், ஓர்
     இமைப்பின், நனி, வில்லால்.

    மணி மேனி - (அம்மானிடர்) மணி போல் ஒளி வீசும் மேனியழகால்;
மன்மதனை ஒப்பர் - காமனை ஒத்திருப்பார்கள்; திரள் தோளின் வலி
தன்னால் -
திரண்ட தோள்களின் வலிமையைக் கணக்கிட்டால்; வடமேருத்
தன் எழில் அழிப்பர் -
வடக்கில் உள்ள மேரு மலையின் அழகையும்
தோல்வியுறச் செய்வர்; என் அதனை இப்பொழுது இசைப்பது? -
அவ்வாற்றல்களை இங்கே இப்போது விரித்துப் பேசி என்ன பயன்;
வில்லால் - (தம்) வில்லாற்றலால்; ஓர் இமைப்பின் - கண்ணிமைப்
பொழுதில்; உலகு ஏழின் நல்மதம் நனி அழிப்பர் - ஏழு உலகங்களின்
வலிமை மிக்காரை யெல்லாம் மிக ஆற்றலோடு அழிக்க வல்லவர் ஆவர்.

     இராம இலக்குவரின் அழகு, வலிமை இரண்டினையும் இப்பாடலில்
கூறினாள்.                                                   52

3119.'வந்தனை முனித்தலைவர்பால்
     உடையர்; வானத்து
இந்துவின் முகத்தர்; எறி
     நீரில் எழு நாளக்
கந்த மலரைப் பொருவு
     கண்ணர்; கழல், கையர்;
அந்தம் இல் தவத் தொழிலர்;
     ஆர் அவரை ஒப்பார்?

    (மேலும் அவர்கள்); முனித்தலைவர் பால் வந்தனை உடையர் -
தவ நலம் சான்ற பெரியோரிடம் வணக்கம் செய்யும் இயல்பினர்; வானத்து
இந்துவின் முகத்தர் -
விண்ணில் விளங்கும் மதியம் போல் முகம்
உடையவர்; எறி நீரில் - அலை வீசும் நீர் நிலையில்; எழு நாளக் கந்த
மலரை -
வளரும் தண்டோடு கூடிய மண மிகு தாமரைப் பூவை; பொருவு
கண்ணர் -
ஒத்த கண்களை உடையவர்; கழல் கையர் - அம்மலர்
போன்றே அமைந்த காலும் கரமும் உடையவர்; அந்தம் இல்தவத்
தொழிலர் -
எல்லையற்ற தவமே கடமையாகக் கொண்டவர்; ஆர் அவரை
ஒப்பார்? -
அவர்களுக்கு நிகராக யாரைக் கூற முடியும்? (எவரையும் கூற
முடியாது).