எற்கு - எனக்கு, அசுரச்சாரியை இன்றிவந்தது. 65 2582. | அன்று மூலம் ஆதியாய்! இன்றுகாறும் ஏழையேன் நன்று தீது நாடலேன்; தின்று தீய தேடினேன். |
ஆதியாய்! - முதற் பொருளே!; அன்று மூலம் இன்று காறும் - அன்று முதல் இன்று வரை; ஏழையேன் நன்றுதீது நாடலேன் - அறிவில்லாத நான் நல்லது கெட்டதை ஆராயவில்லை; தின்று தீய தேடினேன்- உயிர்களைக் கொன்று உண்டு தீவினையைத் தேடிக் கொண்டேன். காம நோயால் அறிவிழந்து, உயிர்க் கொலை புரிந்து தீயவற்றைத் தேடிக்கொண்டான். 66 2583. | தூண்ட நின்ற தொன்மைதான் வேண்ட நின்ற வேத நூல் பூண்ட நின் பொலம் கொள் தாள் தீண்ட இன்று தேறினேன் |
தூண்ட நின்ற தொன்மை தான் - தூண்டுவதற்காக (என்னுள்) அமைந்து நின்ற என் பழைய நல்வினைதான்; வேண்ட நின்ற வேத நூல்- விரும்ப நின் எதிரே வந்து நின்ற வேத நூல்கள்; பூண்ட நின் பொலம் கொள் தாள்தீண்ட - அணிந்துள்ள உன் அழகிய திருவடி என்னைத் தீண்ட; இன்று தேறினேன் - இப்போது என் சாபம் தீர்ந்து நல்லறிவுற்று உய்ந்தேன். நின்ற வேதம் - நிலை பெற்ற வேதமுமாம். பொலன் கொள் தாள் - பொற் கழலணிந்த திருவடிஎனவும் உரைப்பர். தன்னை ஓதி உணர்ந்தவர்க்கு நல்லறிவைத் தூண்டி நின்றும் பழமையாகத்தான்(மக்களால்) விரும்பி நின்றும் விளங்கும் வேதம் என முன்னடிகட்குப் பொருள் கூறுவர். 67 2584. | திறத்தின் வந்த தீது எலாம் அறுத்த உன்னை ஆதனேன் ஒறுத்த தன்மை ஊழியாய்! பொறுத்தி! என்று போயினான் |
ஊழியாய்! - ஊழிக்காலத்தும் அழியாது நிற்பவனே!; திறத்தின் வந்த தீது எலாம் அறுத்த உன்னை - என் வினை ஆற்றலுக்கு ஏற்ப வந்த தீவினைகளை அழித்த உன்னை; ஆதனேன் - மூடனாகியநான்; ஒறுத்த தன்மை பொறுத்தி- பகைத்துச் செய்த தீமைகளைப் பொறுத்தருள்க; என்று போயினான் - என்று சொல்லி (விராதன் தன் பழைய கந்தருவ வடிவில் தும்புரு என்றபெயருடன்) வானுலகு சென்றான். |