பக்கம் எண் :

404ஆரணிய காண்டம்

தத்துறுவது என்னை? மனனே!
     தளரல் அம்மா!
எத் துயர் உனக்கு உளது?
     இனி, பழி சுமக்க,
பத்து உள தலைப் பகுதி;
     தோள்கள் பல அன்றே?

    மனனே - என் உள்ளமே! உடல் பொத்துறப் பழி புகுந்தது -
உடலையும் துளைத்துப் பழி சென்று நின்றது; என நாணி - என்று
வெட்கமுற்று; தத்துறுவது என்னை? - ஏன் தடுமாறுகிறாய்?; தளரல் -
சோர்வடையாதே; உனக்கு எத்துயர் உளது? - உனக்கு அவமானம்
சுமக்கும் எவ்விதத் துன்பமும் வேண்டியதில்லை (ஏனெனில்); இனிப் பழி
சுமக்க -
இனிமேல் அப்பழியைத் தாங்க; பத்துள தலைப்பகுதி -
தலைகள் பத்து உள்ளன; தோள்கள் பல அன்றே - தோள்களும் பல
உள்ளன அன்றோ?

     அம்மா - இடைச் சொல் பழி தீர்க்க வேண்டிய தலைப் பாரமும்,
தோள் வலிமையும் உண்டென மொழிகின்றான்.                      61

கரன் முதலியோர் பற்றி இராவணன் வினவல்

3128. என்று உரைசெயா, நகைசெயா,
     எரி விழிப்பான்,
'வன் துணை இலா இருவர்
     மானிடரை வாளால்
கொன்றிலர்களா, நெடிய
     குன்றுடைய கானில்
நின்ற கரனே முதலினோர்
     நிருதர்?' என்றான்.

    என்று உரை செயா - எனக் கூறி; நகை செயா - சிரித்து; எரி
விழிப்பான் -
நெருப்பெழ விழித்து (இராவணன்); நெடிய குன்றுடைய
கானில் -
பெரு மலை சூழ்ந்த கானகத்தில்; நின்ற கரனே முதலினோர்
நிருதர் -
காவலில் நிலை பெற்ற கரன் முதலாகிய அரக்க வீரர்கள்;
வன்துணை இலா இருவர் மானிடரை -  பெருந்துணை ஏதும் இல்லாமல்
எதிர்த்த அவ்விரு மனிதர்களை; வாளால் கொன்றிலர்களா? - வாள் வீசிக்
கொல்ல வில்லையா?; என்றான் - என்று வினவினான்.

     துணை வலிமையும் இல்லாதவர்களை ஆயுத வலிமை கொண்டோர்
தோற்பிக்க வில்லையா என்றான்.                                 62