பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 405

நடந்ததுபற்றிச் சூர்ப்பணகை கூறல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

3129. அற்று அவன் உரைத்தலோடும், அழுது
     இழி அருவிக் கண்ணள்,
எற்றிய வயிற்றள், பாரினிடை
     விழுந்து ஏங்குகின்றாள்,
'சுற்றமும் தொலைந்தது, ஐய!
     நொய்து' என, சுமந்து கையள்,
உற்றது தெரியும்வண்ணம்,
     ஒருவகை உரைக்கலுற்றாள்:

    அற்று அவன் உரைத்தலோடும் - அவ்வாறு (இராவணன்) கூறிய
மாத்திரத்தில்; அழுது இழி அருவிக் கண்ணள் - அழுவதால் வழியும்
அருவி போன்ற கண்ணீரை உடையவளாய் (சூர்ப்பணகை) ; எற்றிய
வயிற்றள் -
(கைகளால்) அடிக்கப்படும் வயிற்றை உடையவளாய்;
பாரினிடை விழுந்து ஏங்குகின்றாள் - நிலத்தின் மேல் விழுந்து புரண்டு
அழுகின்றவளாய்; 'ஐய - ஐயனே; சுற்றமும் நொய்து தொலைந்தது -
(காவல் நின்ற) உறவும் விரைவில் அழிந்து போனது; எனச் சுமந்த கையள்-
எனத் தலை மீது கையை வைத்தவாறு; உற்றது தெரியும் வண்ணம் -
(கரன் முதலியோருக்கு) நேர்ந்த அழிவின் வரலாறு விளங்கும்படியாக; ஒரு
வகை உரைக்கலுற்றாள் -
ஒருவாறு தொகுத்துக் கூறலாயினாள்.       63

3130.' "சொல்" என்று என் வாயில் கேட்டார்;
     தொடர்ந்து எழு சேனையோடும்
"கல்" என்ற ஒலியில் சென்றார்,
     கரன் முதல் காளை வீரர்;
எல் ஒன்று கமலச் செங் கண் இராமன்
     என்று இசைத்த ஏந்தல்
வில் ஒன்றில், கடிகை மூன்றில்,
     ஏறினர் விண்ணில்' என்றாள்.

    கரன் முதல் காளை வீரர் - கரன் முதலிய இளங்காளைகளான
வீரர்கள்; சொல் என்று என் வாயில் கேட்டார் - நேர்ந்தது சொல் என்று
என் வாய்மொழியைக் கேட்ட உடனே; தொடர்ந்து எழு சேனையோடும்-
இடைவிடாது வரும் படைகளோடும்; கல்லென்ற ஒலியில் சென்றார் -
கல்லென்ற பேரொலி முழங்கப் புறப்பட்டனர்; எல் ஒன்று கமலம் -
ஒளிக்கதிர் பட்டு விரிந்த தாமரை போலும்; செங்கண் இராமன் - சிவந்த
கண்களை உடைய இராமன்; என்று இசைத்த ஏந்தல் - எனப் பெயர்
பெற்ற தலைவனின்; வில் ஒன்றில் கடிகை மூன்றில் - புகழ் பெற்ற
வில்லால்