மன்மதன் வாளி தூவி - மன்மதன் அம்புகள் ஏவி; நலிவது ஓர் வலத்தன் ஆனான் - (இராவணனுக்கு) வருத்தம் தரும் வல்லமையுடையவன் ஆனான்; வன்மையை மாற்றும் ஆற்றல் - ஒருவனுடைய வீரத்தை அழிக்கும் திறமை; காமத்தே வதிந்தது அன்றே - காமத்தின் பால் பொருந்திற்று அன்றோ? வீராதி வீரனையும் வீழ்த்த எளிய மலரம்புகளே காரணமாயின என உணர்த்தினார். 87 | 3154. | எழுந்தனன் இருக்கைநின்று; ஆண்டு, ஏழ் உலகத்துளோரும் மொழிந்தனர் ஆசி; ஓசை முழங்கின, சங்கம் எங்கும்; பொழிந்தன பூவின் மாரி; போயினர் புறத்தோர் எல்லாம்; அழிந்து ஒழி சிந்தையோடும் ஆடகக் கோயில் புக்கான். |
இருக்கை நின்று எழுந்தனன் - (இராவணன்) தான் வீற்றிருந்த அரியாசனத்தினின்றும் எழுந்தான்; ஆண்டு - அப்பொழுது; ஏழ் உலகத்துளோரும் - ஏழு உலகங்களிலும் இருப்பவர்களும்; ஆசி மொழிந்தனர் - வாழ்த்துக்களைக் கூறினார்கள்; எங்கும் சங்கம் ஓசை முழங்கின - எவ்விடத்தும் சங்குகள் ஒலி முழக்கம் செய்தன; பூவின் மாரி பொழிந்தன - மலர் மழை பொழியலாயிற்று; புறத்தோர் எல்லாம் போயினர் - அருகிருந்த பிறர் எல்லாம் அகன்று சென்றனர்; அழிந்து ஒழி சிந்தையோடும் - (இராவணனும்) சிதைந்து குலைகிற மனத்தோடு; ஆடகக் கோயில் புக்கான் - பொன் மாளிகையான (தன்) அரண்மனைக்கு சென்றான். ஆடகம் - நால் வகைப் பொன்னில் ஒருவகை. சாதரூபம், கிளிச் சிறை, சாம்புநதம் என்பன பிற. 88 இராவணன் காம நோய் மேலும் முதிர்தல் | 3155. | பூவினால் வேய்ந்து செய்த பொங்கு பேர் அமளிப் பாங்கர், தேவிமார் குழுவும் நீங்கச் சேர்ந்தனன்; சேர்தலோடும், நாவி நாறு ஓதி நவ்வி நயனமும், குயமும், புக்குப் பாவியா, கொடுத்த வெம்மை பயப்பயப் பரந்தது அன்றே. |
|