பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 423

அழுங்குவானும் ஆயினான் - வருந்துகின்றவனும் ஆனான்.

     பழி பாவங்களைக் காமத்தால் இராவணன் மறந்து போனான்.92

3159. பரம் கிடந்த மாதிரம்பரித்த,
     பாழி யானையின்
கரம் கிடந்த கொம்பு ஒடிந்து அடங்க
     வென்ற காவலன்-
மரம் குடைந்த தும்பிபோல, அனங்கன்
     வாளி வந்து வந்து
உரம் குடைந்து, நொந்து நொந்து,
     உளைந்து உளைந்து-ஒடுங்கினான்.

    பரம் கிடந்த மாதிரம் பரித்த - பாரம் தாங்கும் திசைகளைச் சுமந்த;
பாழி யானையின் - வலிமை மிக்க திக்கு யானைகளுடைய; கரம் கிடந்த
கொம்பு ஒடிந்து -
தும்பிக்கையோடு பொருந்திய கொம்புகள் முறிய;
அடங்க வென்ற காவலன் - முழுவதாக வெற்றி கொண்ட இராவணன்;
மரம் குடைந்த தும்பி போல் - மரத்தைக் குடைகிற வண்டு போல்;
அனங்கன் வாளி வந்து வந்து - மன்மதனின் அம்பு தொடர்ந்து வந்து;
உரம் குடைந்து - (தன்) மார்பை ஊடுருவ; நொந்து நொந்து - மிகவும்
வருத்தமுற்று; உளைந்து உளைந்து - மிகவும் அயர்ச்சியுற்று;
ஒடுங்கினான் - மெலிவுற்றான்.

     வலிய திக்கு யானைகளையும் வெல்லும் திறமுடையோன்மென்மையான
மலர்க் கணைகளுக்குத் தோற்றான் என முரண் காட்டிக்கூறினார். துன்ப
மிகுதி காட்ட, வந்து வந்து, நொந்து நொந்து, உளைந்துஉளைந்து என
அடுக்கி உரைத்தார். அடங்க - முற்றிலும்;93

3160.'கொன்றை துன்று கோதையோடு ஓர்
     கொம்பு வந்து என் நெஞ்சிடை
நின்றது, உண்டு கண்டது' என்று,
     அழிந்து அழுங்கும் நீர்மையான்,
மன்றல் தங்கு அலங்கல் மாரன்
     வாளி போல, மல்லிகைத்
தென்றல் வந்து எதிர்ந்த
     போது, சீறுவானும் ஆயினான்.

    'கொன்றை துன்று கோதையோடு - கொன்றைக் காயை ஒத்த
கூந்தலுடனே; ஓர் கொம்பு வந்து - ஒரு பூங்கொம்பு போன்றாள் வந்து;
என் நெஞ்சிடை நின்றது - எனது மனத்திற்குள் தங்கினாள்; கண்டது
உண்டு -
(அவளை) நான் பார்த்ததுண்டு'; என்று அழிந்து அழுங்கும்
நீர்மையான் -