3172. | வெஞ் சினத்து அரக்கன் ஆண்ட வியல் நகர்மீது போதும் நெஞ்சு இலன், ஒதுங்குகின்ற நிறை மதியோனை நேடி, 'அஞ்சலை; வருதி; நின்னை அழைத்தனன் அரசன்' என்ன, சஞ்சலம் துறந்துதான், அச் சந்திரன் உதிக்கலுற்றான். |
வெஞ்சினத்து அரக்கன் - கொடிய சினம் படைத்த இராக்கதனான இராவணன்; ஆண்ட வியல் நகர் மீது - அரசாளுகின்ற பெரிய இலங்கை மாநகரின் மேலே; போதும் - போவதற்கு; நெஞ்சு இலன் - மன உறுதி இல்லாதவனாய்; ஒதுங்குகின்ற - (ஒரு பக்கமாய்) ஓரத்தில் செல்லுகின்ற; நிறை மதியோனை நேடி - பூரணச் சந்திரனை (ஏவலர்கள்) தேடிக் கண்டு; 'அஞ்சலை வருதி' - அச்சம் நீத்து வருவாயாக; "நின்னை அழைத்தனன்" அரசன் என்ன - உன்னை அழைத்து வரும்படி மன்னன் ஏவினான்' என்று கூற; சஞ்சலம் துறந்து - மனக் கவலை நீத்து; அச் சந்திரன் - அந்தச் சந்திரன்; தான் உதிக்கலுற்றான் - அவ்விலங்கை மாநகரின் மீது உதிக்கத் தொடங்கினான். 106 3173. | அயிர் உறக் கலந்த நல் நீர் ஆழிநின்று, ஆழி இந்து- செயிர் உற்ற அரசன், ஆண்டு ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில், வயிரம் உற்று உடைந்து சென்றோர் வலியவன்-செல்லுமாபோல் உயிர் தெற உவந்து வந்தான் ஒத்தனன், -உதயம் செய்தான். |
செயிர் உற்ற அரசன் - பகைமை பாராட்டிய ஒரு மன்னவன்; ஆண்டு - ஒருக்கால்; ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில் - மெலிவு வந்து ஆற்றல் குன்றிய நேரத்தில்; உடைந்து சென்றோர் வலியவன் - முன்னம் அவனிடம் தோல்வி கண்ட ஒரு வல்லவன்; வயிரம் உற்றுச் செல்லுமா போல் - (பழம் பகைக்குப் பழி தீர்க்கப்) பகைமை பாராட்டி மேற் சென்றாற் போல; ஆழி இந்து - சக்கர வட்டம் போன்ற சந்திரன்; அயிர் உறக் கலந்த நல் நீர் - நுண் மணல் சூழ்ந்த நல்ல நீரை உடைய; ஆழி நின்று - கடலிலிருந்து மேலெழுந்து; உயிர் தெற - இராவணன் உயிரை வருத்த; உவந்து வந்தான் ஒத்தனன் - மகிழ்வோடு வந்தவனைப் போல் விளங்கி; உதயம் செய்தான் - புலப்பட்டுத் தோன்றலுற்றான். |