பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 431

3172.வெஞ் சினத்து அரக்கன் ஆண்ட
     வியல் நகர்மீது போதும்
நெஞ்சு இலன், ஒதுங்குகின்ற
     நிறை மதியோனை நேடி,
'அஞ்சலை; வருதி; நின்னை
     அழைத்தனன் அரசன்' என்ன,
சஞ்சலம் துறந்துதான், அச்
     சந்திரன் உதிக்கலுற்றான்.

    வெஞ்சினத்து அரக்கன் - கொடிய சினம் படைத்த இராக்கதனான
இராவணன்; ஆண்ட வியல் நகர் மீது - அரசாளுகின்ற பெரிய இலங்கை
மாநகரின் மேலே; போதும் - போவதற்கு; நெஞ்சு இலன் - மன உறுதி
இல்லாதவனாய்; ஒதுங்குகின்ற - (ஒரு பக்கமாய்) ஓரத்தில் செல்லுகின்ற;
நிறை மதியோனை நேடி - பூரணச் சந்திரனை (ஏவலர்கள்) தேடிக் கண்டு;
'அஞ்சலை வருதி' - அச்சம் நீத்து வருவாயாக; "நின்னை அழைத்தனன்"
அரசன் என்ன -
உன்னை அழைத்து வரும்படி மன்னன் ஏவினான்'
என்று கூற; சஞ்சலம் துறந்து - மனக் கவலை நீத்து; அச் சந்திரன் -
அந்தச் சந்திரன்; தான் உதிக்கலுற்றான் - அவ்விலங்கை மாநகரின் மீது
உதிக்கத் தொடங்கினான்.                                       106

3173. அயிர் உறக் கலந்த நல் நீர்
     ஆழிநின்று, ஆழி இந்து-
செயிர் உற்ற அரசன், ஆண்டு ஓர்
     தேய்வு வந்துற்ற போழ்தில்,
வயிரம் உற்று உடைந்து சென்றோர்
     வலியவன்-செல்லுமாபோல்
உயிர் தெற உவந்து வந்தான் ஒத்தனன்,
     -உதயம் செய்தான்.

    செயிர் உற்ற அரசன் - பகைமை பாராட்டிய ஒரு மன்னவன்;
ஆண்டு - ஒருக்கால்; ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில் - மெலிவு வந்து
ஆற்றல் குன்றிய நேரத்தில்; உடைந்து சென்றோர் வலியவன் - முன்னம்
அவனிடம் தோல்வி கண்ட ஒரு வல்லவன்; வயிரம் உற்றுச் செல்லுமா
போல் -
(பழம் பகைக்குப் பழி தீர்க்கப்) பகைமை பாராட்டி மேற்
சென்றாற் போல; ஆழி இந்து - சக்கர வட்டம் போன்ற சந்திரன்; அயிர்
உறக் கலந்த நல் நீர் -
நுண் மணல் சூழ்ந்த நல்ல நீரை உடைய; ஆழி
நின்று -
கடலிலிருந்து மேலெழுந்து; உயிர் தெற - இராவணன் உயிரை
வருத்த; உவந்து வந்தான் ஒத்தனன் - மகிழ்வோடு வந்தவனைப் போல்
விளங்கி; உதயம் செய்தான் - புலப்பட்டுத் தோன்றலுற்றான்.