பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 441

     அருந்துறை நிரம்பிய - அரிய அறிவுத் துறைகளில் வல்ல; உயிரின்
அன்பரை -
(தம்) உயிர் போன்ற கணவரை; பிரிந்து உறை தரும் -
பிரிந்து தனித்திருக்கும்; குலப் பேதைமாரின் - குல மாதர்களைப் போன்று;
விரிந்து உறை துறை தொறும் - நகரின் விரிந்த பல பகுதிகளிலும்;
விளக்கம் யாவையும் - உள்ள விளக்குகள் எல்லாம்; எரிந்து இழுது
அஃகல -
எரிந்து நெய் வற்றவில்லையாயினும்; ஒளி இழந்தன - (சூரியன்
வரவால்) தம் ஒளி குன்றின; ஏ - ஈற்றசை.

     பகலின் எதிர்பாராத வரவினால் நேர்ந்த இரண்டு நிகழ்ச்சிகளை
ஒன்றற்கொன்று உவமையாக மொழிந்தார் அஃகுதல் - சுருங்குதல்.
அஃகுதல் இல : அஃகல்.                                       123

3190.புனைந்து இதழ் உரிஞ்சுறு
     பொழுது புல்லியும்,
வனைந்தில, வைகறை
     மலரும் மா மலர்;
நனந் தலை அமளியில்
     துயிலும் நங்கைமார்
அனந்தரின் நெடுங் கணோடு
     ஒத்த ஆம்அரோ.

    வைகறை மலரும் மாமலர் - விடியற் காலையில் மலர வேண்டிய
தாமரை போன்ற சிறந்த மலர்கள்; புனைந்து இதழ் உரிஞ்சுறு பொழுது -
(அழகியதாய்க்) கோலம் கொள்ளும் இதழ்கள் மலரும் உதயகாலம்;
புல்லியும் - நெருங்கிய பின்னும்; வனைந்தில - மலரும் பாங்கு கொள்ள
வில்லை; நனந்தலை அமளியில் - இடம் அகன்ற படுக்கையில்; துயிலும்
நங்கைமார் -
உறக்கம் கொள்ளுகின்ற அரக்க மகளிரின்; அனந்தரின்
நெடுங்கணோடு -
தூக்க வசப்பட்ட நெடிய கண்களோடு; ஒத்த ஆம் -
ஒத்திருந்தன. (அரோ - அசை).

     காரணம் தோன்றிக் காரியம் நிகழாமை கூறுதலால் விபாவனை அணி
என்பர். முன் பாடலும் இவ்வாறு அமைந்தது. அனந்தர் - தூக்கக் கலக்கம்.
                                                          124

3191. இச்சையில் துயில்பவர்
     யாவர் கண்களும்,
நிச்சயம், பகலும் தம்
     இமைகள் நீக்கல-
'பிச்சையும் இடுதும்' என்று,
     உணர்வு பேணலா
வச்சையர் நெடு மனை
     வாயில் மானவே.