இச்சையில் துயில்பவர் யாவர் கண்களும் - (அந்நகரத்தில்) விருப்பம் போல் தூங்குவோர் அனைவருடைய கண்களும்; பகலும் தம் இமைகள் நீக்கல - பகல் வந்த பின்னும் இமை விரியாதிருந்தன; நிச்சயம்- இது சத்தியம்; (இக்கண்கள்); 'பிச்சையும் இடுதும் - கேட்போருக்குப் பிச்சை இடுவோம்; என்று உணர்வு பேணலா - என்னும் எண்ணம் இல்லாத; வச்சையர் - உலோபிகளின்; நெடுமனை வாயில்மான - உயர்ந்த இல்லங்களின் வாசற்கதவு போன்றிருந்தன. (அடைந்திருந்தன); ஏ - ஈற்றசை. நெடுமனை வாயில் என்பதால் மனையின் வளம் தெரிகிறது. வளம் இருந்தாலும் பிச்சையேனும் இடுவோம் என்று நினையும் மனம் இல்லை. பெரிய கண்கள், பொழுதும் விடிந்தது; காண்பன காணும் எண்ணம் இல்லை. வாயிலைத் திறந்தால் எவரேனும் வந்து விடுவரோ என்று கருதி அடைத்த வாசல் என்பது குறிப்பு. உவமையணி, விருந்தினரையும் தக்கோரையும் தேடி வழங்கும் வள்ளன்மைதான் இல்லை; தேடி வரும் இரவலர்க்குப் பிச்சையேனும் இடலாமே என்ற எண்ணம் இல்லை என்பதைப் பிச்சையும் என்ற இழிவு சிறப்பும்மை புலப்படுத்திற்று. 125 3192. | நஞ்சு உறு பிரிவின, நாளின் நீளம் ஓர் தஞ்சு உற விடுவது ஓர் தயாவு தாங்கலால், வெஞ் சிறை நீங்கிய வினையினார் என, நெஞ்சு உறக் களித்தன- நேமிப்புள் எலாம். |
நாளின் நீளம் - பகல் நேரம் நீளுதலால்; ஓர் தஞ்சு உற - அதுவே தஞ்சமாக அமைய; நஞ்சுறு பிரிவின - கொடிய விடம் போலும் பிரிவுத் துன்பத்தினைப் பெற்றனவாய் விளங்கிய; நேமிப்புள் எலாம் - சக்கரவாகப் பறவைகளெல்லாம்; விடுவது ஓர் தயாவு தாங்கலால் - அத்துன்பம் நீங்கும் பகற் பொழுதின் கருணையினால்; வெஞ்சிறை நீங்கிய - பிறவியாகிய கொடிய சிறையினின்றும் விடுபட்ட; வினையினார் என - நல் வினையாளர் போல; நெஞ்சு உறக் களித்தன - மனம் நிறைந்து மகிழ்ந்தன. இரவில் பிரிவுத் துன்பமுறும் சக்கரவாகப் புட்கள் பகலில் கூடி மகிழ்ந்தன. பிரிவு நஞ்சென உவமிக்கப் பெற்றது. நீளம் - கூடு எனவும் பொருள் கொள்ளலாம். தயாவு : தயா, தயவு, கருணை. 126 3193. | நாள்மதிக்கு அல்லது, நடுவண் எய்திய ஆணையின் திறக்கலா அலரில் பாய்வன, |
|