| 'எள்ளா உலகு யாவையும் யாவரும் வீவது என்பது உள்ளாது, உமிழ்ந்தான், விடம் உண்ட ஒருத்தன்' என்றான். |
விள்ளாது - துண்டு படாமல்; இடை செறிந்து - எங்கும் இடைவெளியின்றி நிறைந்து; மேல் உற ஓங்கி - விண்ணையும் வளைத்து வளர்ந்து; எங்கும் நள்ளா இருள் வந்து - எங்கும் பொருந்தாத இருள் வந்து; அகன் ஞாலம் விழுங்கலோடும் - பரந்த உலகினை மூடி மறைத்ததும்; விடம் உண்ட ஒருத்தன் - நஞ்சினை விழுங்கிய ஒப்பற்ற சிவபெருமான்; எள்ளா உலகு யாவையும் - இகழத் தக்கதல்லாத எல்லா உலகங்களையும்; யாவரும் - எல்லா மக்களையும் (பொருள்களையும்); வீவது என்பது உள்ளாது - அழிக்கும் என்று கருதாமல்; உமிழ்ந்தான் - அந்நஞ்சை உமிழ்ந்து விட்டான்; என்றான் - என்று (இராவணன்) மொழிந்தான். இப்பாடல் உருவக அணி. 140 3207. | 'வேலைத்தலை வந்து ஒருவன் வலியால் விழுங்கும் ஆலத்தின் அடங்குவது அன்று இது: அறிந்து உணர்ந்தேன்; ஞாலத்தொடு விண் முதல் யாவையும் நாவின் நக்கும் காலக் கனல் கார் விடம் உண்டு கறுத்தது அன்றே. |
வேலைத்தலை வந்து - திருப்பாற் கடலினின்றும் பிறந்து; ஒருவன் வலியால் விழுங்கும் - ஒப்பற்ற சிவபெருமான் தன் ஆற்றலால் உண்ட; ஆலத்தின் - ஆலகால விடம் எனும் ஒன்றில்; இது - இவ்விருள்; அடங்குவதன்று - அடக்கத் தக்கதன்று; அறிந்து உணர்ந்தேன் - இதனை யான் தெளிந்து கொண்டேன்; ஞாலத்தொடு விண்முதல் யாவையும் - மண்ணையும் விண்ணையும் யாவற்றையும்; நாவின் நக்கும் - தன் நாவால் தீண்டி அழிக்கும்; காலக் கனல் - ஊழிக் காலமாகிய நெருப்புப் பாம்பு; கார்விடம் உண்டு - கரிய விடத்தைத் தேக்கி; கறுத்தது அன்றே - கருமை பூண்டதை ஒக்கும் அன்றோ? ஆலகால நஞ்சு சிவனால் விழுங்கப்பட்டுவிட்டது; இந்த இருளை விழுங்கும் சக்தி வேறு எதுவுமே இல்லை. விழுங்கப்பட முடியாத இந்த இருளாகிய நஞ்சு மண் முதல் விண் ஈறாக உள்ள அனைத்தையும் விழுங்கிவிடும். தற்குறிப்பேற்ற அணி. நாவின் நக்கும் என்றமையால் காலக் கனலாகிய பாம்பு என வருவிக்கப்பட்டது. 141 |