| கண்பால் உறும் மாயை கவற்றுதல் கற்ற நம்மை, மண்பாலெவரேகொல், விளைப்பவர் மாயை?' என்றான். |
நான் கண்டது இது - நான் பார்த்த இவ்வடிவம்; பெண்பால் உரு - பெண் வடிவமாகும்; பேதை - அறியாமை உடையவளே!; நீ ஈண்டு - நீயோ இங்கு; எண்பாலும் இலாதது ஓர் - எண்ணத்தில் எங்கும் கருதப்படாத ஒரு; ஆண் உரு என்றி - ஆண் வடிவம் என்று கூறுகின்றாய்; என்னே - இது வியப்பாய் இருந்தது; கண்பால் உறும் மாயை - கண்கள் நம்பும்படியான மாயச் செய்கை; கவற்றுதல் கற்ற நம்மை - மயங்கும்படி செய்யவல்ல வித்தையாய்ப் பயின்ற நமக்கு; மண்பால் - இவ்வுலகில்; மாயை விளைப்பவர் எவரே கொல் - மாயை செய்தவர் யாராக இருக்கலாம்; என்றான் - என ஐயுற்று (இராவணன்) மொழிந்தான். மாயையில் வல்ல நம்மையும் ஏமாற்றும் மாயை உண்டோ என்றான். ஒருவர் பெண் என்ன, இன்னொருவர் ஆண் என்ன விளைந்த மயக்கத்தை இவ்வாறு குறித்தான். 150 3217. | 'ஊன்றும் உணர்வு அப்புறம் ஒன்றினும் ஓடல் இன்றி, ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை கனற்ற நின்றாய்க்கு ஏன்று, உன் எதிரே, விழி நோக்கும் இடங்கள்தோறும், தோன்றும், அனையாள்; இது தொல் நெறித்து ஆகும்' என்றாள். |
'ஊன்றும் உணர்வு - (சீதையின் பால்) பதிந்து போன அறிவு; அப்புறம் ஒன்றினும் ஓடல் இன்றி - வேறு எதனினும் சென்று தங்காமல்; ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை - மிக வளர்ந்துவிட்ட பெரிய காமம்; கனற்ற நின்றாய்க்கு - வெப்ப மூட்ட விளங்கும் உனக்கு; ஏன்று - பொருந்தும்படி; உன் எதிரே விழி நோக்கும் இடங்கள் தோறும் - உன் முன் கண்கள் பார்க்கும் இடமெல்லாம்; அனையாள் தோன்றும் - அவள் உருவே தோன்றலாயிற்று; இது தொல் நெறித்து ஆகும் - இவ்வாறு தோன்றுதல் பண்டு முதல் வழக்கமானது தான்; என்றாள் - என்று சூர்ப்பணகை (சமாதானம்) கூறினாள். தொல்நெறித்து ஆகும் என்று இராவணனுக்குச் சொன்ன சிறுமை தனக்கும் உரியது என்பதைச் சூர்ப்பணகை உணராதது குறிக்கத்தக்கது. 151 |