பக்கம் எண் :

458ஆரணிய காண்டம்

வருவாயாக; என்றாள் - என (ஆலோசனை) கூறினாள் (ஆல் - அசை).

     சீதையை நினைந்து நோவதைவிட, அவளைக் கைப்பற்றிஅடைவாயாக
என்றாள் சூர்ப்பணகை.                                         153

3220. என்றாள் அகன்றாள்; அவ்
     அரக்கனும் ஈடழிந்தான்;
ஒன்றானும் உணர்ந்திலன்; ஆவி
     உலைந்து சோர்ந்தான்;
நின்றாரும் நடுங்கினர்;
     நின்றுள நாளினாலே
பொன்றாது உளன் ஆயினன்;
     அத்துணைபோலும் அன்றே.

    என்றாள் அகன்றாள் - என்றுரைத்த சூர்ப்பணகை அவ்விடம் விட்டு
நீங்கினாள்; அவ் அரக்கனும் - அவ் விராவணனும்; ஈடு அழிந்தான் -
தன் சமநிலை குலைந்தான்; ஒன்றானும் உணர்ந்திலன் - எதனாலும்
நல்லறிவு பெறாதவனாயினான்; ஆவி உலைந்து சோர்ந்தான் - உயிர்
நிலைகுலைந்து தளர்ந்தான்; நின்றாரும் நடுங்கினர் - பணி செய்ய
நின்றாரும் அச்சம் கொண்டனர்; நின்றுள நாளினாலே - மிச்சம் இருக்கிற
ஆயுட் காலத்தால்; பொன்றாது உளன் ஆயினன் - சாகாது
பிழைத்திருப்பான் ஆனான்; அத்துணை போலும் அன்றே - அவ்வளவே
அவன் நிலை எனல் ஆயிற்று அன்றோ?

     அவன் உயிர் இழவாதிருந்தது ஆயுள் பலத்தால் மட்டுமே என்றார். 154

சந்திரகாந்த மண்டபம் அமைத்துத் தங்குதல்

3221.'இறந்தார் பிறந்தார்' என,
     இன் உயிர் பெற்ற மன்னன்,
மறம் தான் உணர்ந்தான், அவண்,
     மாடு நின்றாரை நோக்கி,
' "கறந்தால் என நீர் தரு
     சந்திரகாந்தத்தாலே,
சிறந்து ஆர் மணி மண்டபம்
     செய்க" எனச் செப்புக' என்றான்.

    இறந்தார் பிறந்தார் என - மரணமுற்றவன் மீண்டும் பிறந்தான்
எனும்படியாய்; இன் உயிர் பெற்ற மன்னன் - தன் இனிய உயிரைப் பெற்ற
இராவணன்; மறம் தான் உணர்ந்தான் - தன் வலிமையை உணர்ந்து
கொண்டவனாய்; அவண் மாடு நின்றாரை நோக்கி - அங்குப் பக்கத்தில்
இருந்தவர்களைப் பார்த்து; "கறந்தால் என - பால் கறந்தால் சுரப்பது