பக்கம் எண் :

462ஆரணிய காண்டம்

3227. ஊறு, ஓசை, முதல் பொறி யாவையும்,
     ஒன்றின் ஒன்று
தேறா நிலை உற்றது ஓர் சிந்தையன்;
     செய்கை ஓரான்;
வேறு ஆய பிறப்பிடை, வேட்கை
     விசித்தது ஈர்ப்ப,
மாறு ஓர் உடல் புக்கென,
     மண்டபம் வந்து புக்கான்.

    ஊறு - தொடுதல்; ஓசை - கேட்டல்; முதற் பொறியாவையும் -
முதலான உணர்வு தரும் ஐம் பொறிகளும்; ஒன்றின் ஒன்று தேறா நிலை-
ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்து உணர முடியாத நிலையினை;
உற்றதோர் சிந்தையன் - அடைந்த குழப்ப மனம் படைத்தவன்; செய்கை
ஓரான் -
இன்னது செய்வதென விளங்காத இராவணன்; வேட்கை
விசித்தது ஈர்ப்ப -
ஆசை பற்றி இழுத்து வர; வேறு ஆய பிறப்பிடை -
மற்றொரு பிறவி எடுத்து (அப்பிறப்பில்); மாறு ஓர் உடல் புக்கென -
இன்னொரு உடல் கொண்டு வந்தவன் போல்; மண்டபம் வந்து புக்கான் -
சந்திர காந்த மண்டபம் அடைந்தான்.

     ஐம்பொறி உணர்வுகளும் நிலைகுலைந்தமையால் ஆற்றல் மிக்க
இராவணன் வேறொரு பிறவி எடுத்தவன் போல் வலிமையிழந்து காட்சி
தந்தான்.                                                    161

அறுசீர் ஆசிரிய விருத்தம்

3228. தண்டல் இல் தவம் செய்வோர்,
     தாம் வேண்டிய, தாயின் நல்கும்
மண்டல மகர வேலை
     அமுதொடும் வந்ததென்ன,
பண் தரு சுரும்பு சேரும் பசு மரம்
      உயிர்த்த பைம் பொன்
தண் தளிர் மலரின் செய்த சீதளச்
     சேர்க்கை சார்ந்தான்.

    தண்டல் இல் தவம் செய்வோர் - விருப்பம் அழித்துத் தவம்
புரிந்த தேவர்கள்; தாம் வேண்டிய தாயின் நல்கும் - எதனை
விரும்பினாலும் தாயைப் போல் வழங்குகின்ற; மண்டல மகர வேலை -
மகர மீன்கள் உலாவும் வட்ட வடிவமான பாற்கடல்; அமுதொடும் வந்தது
என்ன -
அமுத கலசத்தோடு வந்தாற்போல; பண்தரு சுரும்பு சேரும் -
இசை பாடும் வண்டுகள் மொய்க்கும்; பசுமரம் உயிர்த்த - பச்சை
மரங்களில் பிறந்த; பைம்பொன் தண்டளிர் - பொன்னிற இளந்
தளிர்களாலும்; மலரின் செய்த -