பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 463

மலர்களாலும் சமைத்த; சீதளச் சேர்க்கை - குளிர்ச்சியான படுக்கை
அமைந்திருக்க; சார்ந்தான் - (அதனை இராவணன்) அடைந்தான்.

     அமுதப் பாற்கடல் போன்றிருந்த பூந்தளிர்ப் படுக்கை, தவம் பலனை
எதிர் நோக்காது செய்யப்படுவது. ஆயினும் எதனையும் தரவல்லது.
இதனைத் 'கண்டல் இல் தவம்' என்றார்.                           162

தென்றலைச் சீறல்

3229.நேரிழை மகளிர் கூந்தல் நிறை
     நறை வாசம் நீந்தி,
வேரி அம் சரளச் சோலை
     வேனிலான் விருந்து செய்ய,
ஆர் கலி அழுவம் தந்த அமிழ்தென,
     ஒருவர் ஆவி
தீரினும் உதவற்கு ஒத்த தென்றல்
     வந்து இறுத்தது அன்றே.

    நேரிழை மகளிர் கூந்தல் - நல்ல அணிகலன்கள் அணிந்த
பெண்களின் கூந்தலில்; நிறை நறை வாசம் நீந்தி - நிறைந்த (மலர்களின்)
தேனும் மணமும் தோய்ந்து; வேரி அம் சரளச் சோலை - நறுமணம்
நிரம்பிய அழகிய இனிய சோலைகளில்; வேனிலான் விருந்து செய்ய -
மன்மதனுக்கு விருந்து வைக்கும் முகத்தான்; ஆர்கலி அழுவம் தந்த
அமிழ்தென -
ஓசைமிக்க கடல் உவந்தளித்த அமுதம் போன்றதும்;
ஒருவர் ஆவி தீரினும் - ஒருவர் உயிர் போகும் பொழுதிலும்; உதவற்கு
ஒத்த -
அதனை மீட்டுத் தர வல்லதான; தென்றல் - தென்றற் காற்று;
வந்து இறுத்தது - அங்கு வந்து சேர்ந்தது (அன்றே - அசை).

     உயிர் போகும் போதும் மீட்டுத் தரும் இனிய தென்றல் இங்கு
இராவணன் உயிரைப் பறிப்பது போல் வந்தது தோன்ற இவ்வாறு கூறினார்.
                                                           163

3230.சாளரத்தூடு வந்து தவழ்தலும்,
     தரித்தல் தேற்றான்;
நீள் அரத்தங்கள் சிந்தி, நெருப்பு
     உக, நோக்கும் நீரான்;
வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர்
     மாசுணம் வரக் கண்டன்ன
கோள் உறக் கொதித்து விம்மி,
     உழையரைக் கூவிச் சொன்னான்:

    நீள் அரத்தங்கள் சிந்தி - நெடிய இரத்தத் துளிகள் சிந்தி; நெருப்பு
உக -
தீப்பொறிகளும் கக்கும்படி; நோக்கும் நீரான் - சினமுடன்
பார்க்கும்