பக்கம் எண் :

464ஆரணிய காண்டம்

கண்கள் கொண்ட இராவணன்; சாளரத்தூடு வந்து தவழ்தலும் -
(தென்றல்) பலகணி வழியே வந்து பாயவும்; தரித்தல் தேற்றான் -
பொறுக்க இயலாதவனாய் ஆனான்; வாழ்மனை ஆண்டு - வாழும்
இல்லத்தின்கண்; ஓர் மாகணம் புகுந்தது வரக் கண்டன்ன - ஒரு மலைப்
பாம்பு நுழைந்து வரக் கண்டது போல்; கோள் உறக் கொதித்து - துன்பம்
கொண்டு சினமுற்று; விம்மி - கலங்கி; உழையரைக் கூவிச் சொன்னான்-
பணியாளரைக் கூப்பிட்டுப் பின் வருமாறு கூறினான்.

     மலையினின்று வரும் மலய மாருதமான தென்றலை மலைப் பாம்பாகக்
குறிப்பிட்டார். தென்றல் என்றதற்கேற்ப அதன் அசைவினைத் தவழ்தல்
என்றார்.                                                    164

3231.'கூவலின் உயிர்த்த சில் நீர்
     உலகினைக் குப்புற்றென்ன,
தேவரில் ஒருவன் என்னை
     இன்னலும் செயத்தக்கானோ?
ஏவலின் அன்றி, தென்றல்
     எவ் வழி எய்திற்று' என்னா,
'காவலின் உழையர்தம்மைக் கொணருதிர்
     கடிதின்' என்றான்.

    கூவலின் உயிர்த்த சில் நீர் - கிணற்றில் தோன்றிய சிறிதளவு
தண்ணீர்; உலகினைக் குப்புற்றென்ன - உலகத்தை மூழ்கடித்தது என்றாற்
போல; தேவரில் ஒருவன் - (எனக்கு ஆட்பட்ட) தேவரில் ஒருவனாகிய
வாயு; என்னை இன்னலும் செயத் தக்கானோ - எனக்கே தீமையும்
செய்ய வல்லவன் ஆகிவிட்டானோ; ஏவலின் அன்றி - என்
கட்டளையின்றி; தென்றல் எவ்வழி எய்திற்று - எவ்வாறு தென்றல் இங்கு
வந்தது; என்னா - என்று (இராவணன்) வினவி; காவலின் உழையர்
தம்மை -
காவல் பணியாளர்களை; கடிதின் கொணருதிர் - விரைவாக
அழையுங்கள்; என்றான் - எனக் கூறினான்.

     கிணற்று நீர் உலகை மூழ்கடித்தாற் போல ஒரு தேவன் எனக்கு
இன்னல் செய்தான் என்று ஏளனமாய் உரைத்தான் இராவணன்.        165

3232. அவ் வழி, உழையர் ஓடி, ஆண்டு
     அவர்க் கொணர்தலோடும்,
வெவ் வழி அமைந்த செங் கண்
     வெருவுற நோக்கி, வெய்யோன்,
'செவ் வழி, தென்றலோற்குத் திருத்தினிர்
     நீர்கொல்?' என்ன,