| 'இவ்வழி இருந்த காலைத் தடை அவற்கு இல்லை' என்றார். |
அவ்வழி - அது கேட்ட பொழுதில்; உழையர் - பணியாளர்; ஓடி - ஓட்டமாய்ச் சென்று; ஆண்டு அவர்க் கொணர்தலோடும் - அங்கு அக் காவலாளரை அழைத்து வரவும்; வெவ் வழி அமைந்த செங்கண் வெருவுற நோக்கி - கொடுமை நிறைந்த சிவந்த கண்களால் (அக்காவலர்) அஞ்சும்படி நோக்கி; வெய்யோன் - கோபம் மிக்கவனாகிய இராவணன்; தென்றலோற்கு - தென்றல் காற்றுக்கு; செவ்வழி திருத்தினிர் நீர் கொல் - நன்கு வழி அமைத்துக் கொடுத்தவர் நீங்கள் தாமோ; என்ன - என்று (சின) வினா எழுப்பியதும்; 'இவ்வழி இருந்த காலை - தாங்கள் இவண் எழுந்தருளும் பொழுதில்; தடை அவற்கு இல்லை - தென்றல் வரலாகாது என்ற தடை உத்தரவு இல்லை'; என்றார் - என்று (பணிமொழி) பகர்ந்தனர். வாயிலை நாங்கள் காவல் காக்கிறோம். சன்னல் வழியே வருவதைத் தடுத்தோம் இல்லை எனக் கூறலுமாம். 166 3233. | 'வேண்டிய நினைந்து செய்வான் விண்ணவர் வருவது என்றால், மாண்டது போலும் கொள்கை, யானுடை வன்மை? வல்லைத் தேண்டி நீர் திசைகள்தோறும் சேணுற விசையில் செல்குற்று ஈண்டு இவன் தன்னைப் பற்றி, இருஞ்சிறை இடுதிர்' என்றான். |
வேண்டிய நினைந்து செய்வான் - தாங்கள் விரும்பியவாறு எண்ணிச் செயல்பட; விண்ணவர் வருவது என்றால் - தேவர்கள் வருவார்கள் என்றால்; யானுடை வன்மைக் கொள்கை - என்னுடைய ஆற்றற் கோட்பாடு; மாண்டது போலும் - அழிந்து போனது போலும்; வல்லைத் தேண்டி - விரைவாக எங்கும் தேடி; திசைகள் தோறும் - எட்டுத்திசைகளிலும்; வேணுற விசையில் செல்குற்று - தொலை தூரங்களிலும் வேகமாய்ச் சென்று; இவன் தன்னைப் பற்றி - வாயு தேவனைப் பிடித்து; நீர் - நீங்கள்; ஈண்டு இருஞ்சிறை இடுதிர் - இங்கே பெருஞ்சிறைச் சாலையில் தள்ளுமின்; என்றான் - என்று இராவணன் மொழிந்தான். காற்றைப் பிடித்துக் கடுஞ்சிறையில் இட இராவணன் ஆணையிட்டான். 167 |