பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 465

'இவ்வழி இருந்த காலைத் தடை
     அவற்கு இல்லை' என்றார்.

    அவ்வழி - அது கேட்ட பொழுதில்; உழையர் - பணியாளர்; ஓடி -
ஓட்டமாய்ச் சென்று; ஆண்டு அவர்க் கொணர்தலோடும் - அங்கு அக்
காவலாளரை அழைத்து வரவும்; வெவ் வழி அமைந்த செங்கண்
வெருவுற நோக்கி -
கொடுமை நிறைந்த சிவந்த கண்களால் (அக்காவலர்)
அஞ்சும்படி நோக்கி; வெய்யோன் - கோபம் மிக்கவனாகிய இராவணன்;
தென்றலோற்கு - தென்றல் காற்றுக்கு; செவ்வழி திருத்தினிர் நீர் கொல்
-
நன்கு வழி அமைத்துக் கொடுத்தவர் நீங்கள் தாமோ; என்ன - என்று
(சின) வினா எழுப்பியதும்; 'இவ்வழி இருந்த காலை - தாங்கள் இவண்
எழுந்தருளும் பொழுதில்; தடை அவற்கு இல்லை - தென்றல் வரலாகாது
என்ற தடை உத்தரவு இல்லை'; என்றார் - என்று (பணிமொழி) பகர்ந்தனர்.

     வாயிலை நாங்கள் காவல் காக்கிறோம். சன்னல் வழியே வருவதைத்
தடுத்தோம் இல்லை எனக் கூறலுமாம்.                           166

3233.'வேண்டிய நினைந்து செய்வான்
    விண்ணவர் வருவது என்றால்,
மாண்டது போலும் கொள்கை,
     யானுடை வன்மை? வல்லைத்
தேண்டி நீர் திசைகள்தோறும்
     சேணுற விசையில் செல்குற்று
ஈண்டு இவன் தன்னைப் பற்றி,
     இருஞ்சிறை இடுதிர்' என்றான்.

    வேண்டிய நினைந்து செய்வான் - தாங்கள் விரும்பியவாறு
எண்ணிச் செயல்பட; விண்ணவர் வருவது என்றால் - தேவர்கள்
வருவார்கள் என்றால்; யானுடை வன்மைக் கொள்கை - என்னுடைய
ஆற்றற் கோட்பாடு; மாண்டது போலும் - அழிந்து போனது போலும்;
வல்லைத் தேண்டி - விரைவாக எங்கும் தேடி; திசைகள் தோறும் -
எட்டுத்திசைகளிலும்; வேணுற விசையில் செல்குற்று - தொலை
தூரங்களிலும் வேகமாய்ச் சென்று; இவன் தன்னைப் பற்றி - வாயு
தேவனைப் பிடித்து; நீர் - நீங்கள்; ஈண்டு இருஞ்சிறை இடுதிர் - இங்கே
பெருஞ்சிறைச் சாலையில் தள்ளுமின்; என்றான் - என்று இராவணன்
மொழிந்தான்.

     காற்றைப் பிடித்துக் கடுஞ்சிறையில் இட இராவணன் ஆணையிட்டான்.
                                                           167