அமைச்சரோடு ஆராய்தலும் மாரீசனை அடைதலும் 3234. | 'காற்றினோன்தன்னை வாளா முனிதலின் கண்டது இல்லை; கூற்றும் வந்து என்னை இன்னே குறுகுமால், குறித்த ஆற்றால் வேல் தரும் கருங் கட் சீதை மெய் அருள் புனையேன்என்றால்; ஆற்றலால் அடுத்தது எண்ணும் அமைச்சரைக் கொணர்திர்' என்றான். |
காற்றினோன் தன்னை - வாயு பகவானை; வாளா - வறிதே; முனிதலின் கண்டது இல்லை - சினப்பதனால் ஒரு பயனும் இல்லை; குறித்த ஆற்றால் - நான் திட்டமிட்டபடி; வேல் தரும் கருங் கண் சீதை- வேல் போலும் கரிய கண்களை உடைய சீதையின்; மெய் அருள் புனையேன் என்றால் - உண்மையான அன்பை நான் அடைய வில்லையெனில்; இன்னே - இப்பொழுதே; கூற்றும் வந்து என்னைக் குறுகும் - காலனும் என்னை நெருங்கி வந்து விடுவான்; எனவே; ஆற்றலால் அடுத்தது எண்ணும் - தம் வல்லமையால் வருங்காலத்தை உணரவல்ல; அமைச்சரைக் கொணர்திர் - மந்திரிமார்களை அழைத்து வாருங்கள்; என்றான் - என (இராவணன்) பணித்தான். ஆல் - அசை. என் வல்லமையால் சீதையைப் பெறவில்லையானால் காற்றைப் போலவும் கூற்றும் துன்பம் செய்ய வந்து விடுவதில் வியப்பதற்கில்லை என இராவணன் கருதினான். 168 3235. | ஏவின சிலதர் ஓடி, 'ஏ' எனும் துணையில், எங்கும் கூவினர்; கூவலோடும் குறுகினர் - கொடித் திண் தேர்மேல், மாவினில், சிவிகை தன்மேல், மழை மதக் களிற்றின் - வையத் தேவரும், வானம் தன்னில் தேவரும், சிந்தை சிந்த. |
ஏவின சிலதர் ஓடி - கட்டளையைப் பெற்ற பணியாளர் விரைந்து; ஏ எனும் துணையில் - ஏ எனும் முன்னர்; எங்கும் கூவினர் - எங்கணும் சென்று அமைச்சரை அழைத்தனர்; கூவலோடும் - அவ்வாறு அழைத்ததும்; வையத் தேவரும் - உலகின் கண் உள்ள முனிவரும்; வானம் தன்னில் தேவரும் - விண்ணுலகத் தேவரும்; சிந்தை சிந்த - மனம் துணுக்குற; (அமைச்சர்கள் எல்லாம்); கொடித் திண் தேர் மேல் - கொடி அசையும் |