பக்கம் எண் :

466ஆரணிய காண்டம்

அமைச்சரோடு ஆராய்தலும் மாரீசனை அடைதலும்

3234.'காற்றினோன்தன்னை வாளா
     முனிதலின் கண்டது இல்லை;
கூற்றும் வந்து என்னை இன்னே
     குறுகுமால், குறித்த ஆற்றால்
வேல் தரும் கருங் கட் சீதை மெய்
     அருள் புனையேன்என்றால்;
ஆற்றலால் அடுத்தது எண்ணும் அமைச்சரைக்
     கொணர்திர்' என்றான்.

    காற்றினோன் தன்னை - வாயு பகவானை; வாளா - வறிதே;
முனிதலின் கண்டது இல்லை - சினப்பதனால் ஒரு பயனும் இல்லை;
குறித்த ஆற்றால் - நான் திட்டமிட்டபடி; வேல் தரும் கருங் கண்
சீதை-
வேல் போலும் கரிய கண்களை உடைய சீதையின்; மெய் அருள்
புனையேன் என்றால் -
உண்மையான அன்பை நான் அடைய
வில்லையெனில்; இன்னே - இப்பொழுதே; கூற்றும் வந்து என்னைக்
குறுகும் -
காலனும் என்னை நெருங்கி வந்து விடுவான்; எனவே;
ஆற்றலால் அடுத்தது எண்ணும் - தம் வல்லமையால் வருங்காலத்தை
உணரவல்ல; அமைச்சரைக் கொணர்திர் - மந்திரிமார்களை அழைத்து
வாருங்கள்; என்றான் - என (இராவணன்) பணித்தான். ஆல் - அசை.

     என் வல்லமையால் சீதையைப் பெறவில்லையானால் காற்றைப்
போலவும் கூற்றும் துன்பம் செய்ய வந்து விடுவதில் வியப்பதற்கில்லை என
இராவணன் கருதினான்.                                       168

3235. ஏவின சிலதர் ஓடி, 'ஏ' எனும்
     துணையில், எங்கும்
கூவினர்; கூவலோடும் குறுகினர் -
     கொடித் திண் தேர்மேல்,
மாவினில், சிவிகை தன்மேல், மழை
     மதக் களிற்றின் - வையத்
தேவரும், வானம் தன்னில் தேவரும்,
     சிந்தை சிந்த.

    ஏவின சிலதர் ஓடி - கட்டளையைப் பெற்ற பணியாளர் விரைந்து;
எனும் துணையில் -
ஏ எனும் முன்னர்; எங்கும் கூவினர் - எங்கணும்
சென்று அமைச்சரை அழைத்தனர்; கூவலோடும் - அவ்வாறு
அழைத்ததும்; வையத் தேவரும் - உலகின் கண் உள்ள முனிவரும்;
வானம் தன்னில் தேவரும் - விண்ணுலகத் தேவரும்; சிந்தை சிந்த -
மனம் துணுக்குற; (அமைச்சர்கள் எல்லாம்); கொடித் திண் தேர் மேல் -
கொடி அசையும்