| கருந் தட மலைஅன்னானை எதிர்கொண்டு, கடன்கள் யாவும் திருந்திய செய்து, செவ்வித் திருமுகம் நோக்கிச் செப்பும்: |
அந்த இராவணன் எய்தலோடும் - அந்த (அரக்கர் தலைவன்) இராவணன் சென்று சேர்ந்தவுடன்; இருந்த மாரீசன் - அங்கிருந்த மாரீசன்; பொருந்திய பயத்தன் - அச்சம் அடைந்தவனாய்; சிந்தை பொருமுற்று - மனம் வெதும்பி; வெருவுகின்றான் - கலக்கம் அடைந்தவனாய்; கருந்தட மலை அன்னானை - கரிய பெரிய மலை போன்ற இராவணனை; எதிர் கொண்டு - முன் சென்று வரவேற்று; கடன்கள் யாவும் திருந்திய செய்து - சிறப்பான முறையில் உபசரணைகள் ஆற்றி; செவ்வித் திருமுகம் நோக்கி - பொலிவு மிக்க இராவணன் முகம் பார்த்து; செப்பும் - பேசத் தொடங்கினான். தவநெறி மேற்கொண்டிருந்த மாரீசனுக்கு இராவணன் தனித்த வருகை மனத்தில் அச்சத்தை மூட்டியது. 1 கலிநிலைத் துறை 3238. | 'சந்த மலர்த் தண் கற்பக நீழல் தலைவற்கும், அந்தகனுக்கும், அஞ்ச அடுக்கும் அரசு ஆள்வாய்! இந்த வனத்து, என் இன்னல் இருக்கைக்கு, எளியோரின் வந்த கருத்து என்? சொல்லுதி' என்றான்-மருள்கின்றான். |
மருள்கின்றான் - (எதற்காக இராவணன் வந்தானோ என) மயங்குகின்ற மாரீசன்; சந்த மலர்த்தண் - அழகிய குளிர்ந்த மலர்களை உடைய; கற்பக நீழல் தலைவற்கும் - கற்பக மர நிழலில் அரசாளும் இந்திரனுக்கும்; அந்தகனுக்கும் - எமனுக்கும்; அஞ்ச - அச்சம் வரும்படி; அடுக்கும் அரசாள்வாய் - மேல் நெருங்கி அரசாட்சி புரிபவனே; இந்த வனத்து - இந்தக் காட்டுக்குள்; என் இன்னல் இருக்கைக்கு - என் துன்பம் மிக்க குடியிருப்பை நாடி; எளியோரின் - யாருமற்ற எளியோரைப் போல; வந்த கருத்து என் - நீ வந்ததன் நோக்கம் யாது?; சொல்லுதி என்றான் - எடுத்துரைப்பாயாக' என்று கூறினான். தன் குடியிருப்பை இன்னல் இருக்கை என்றது, காட்டுக்குள் வசதி இல்லாத தவச்சாலை என்பது பற்றி. இந்திரனையும் அந்தகனையும் இணைத்துக் கூறியது, இராவணனின் தலைமையையும், அழிக்கும் திறனையும் இணைத்துக் கூறியவாறாம். 2 |