இராவணன் சீதையைக் கவரத் துணையாகுமாறு வேண்டுதல் 3239. | 'ஆனது அனைத்தும்; ஆவி தரித்தேன், அயர்கின்றேன்; போனது, பொற்பும்; மேன்மையும் அற்றேன், புகழோடும்; யான் அது உனக்கு இன்று எங்ஙன் உரைக்கேன் இனி?' என்னா, 'வானவருக்கும் நாண அடுக்கும் வசை மன்னோ?' |
அனைத்தும் ஆனது - (நிகழ வேண்டாதன) பலவும் நிகழ்ந்து விட்டன; ஆவி தரித்தேன் - எனினும் உயிர் பிழைத்திருந்தேன்; அயர் கின்றேன் - இன்னும் தளர்ச்சியுறுகின்றேன்; பொற்பும் போனது - என் பொலிவும் நீங்கியது; புகழோடும் மேன்மையும் அற்றேன் - என் பெருமைகளும், புகழும் அகன்றன; யான் இன்று உனக்கு - நான் இப்போது உன் பால்; இனி அது எங்ஙன் உரைக்கேன் - இனி அது பற்றி எவ்வாறு எடுத்துச் சொல்வேன்?; என்னா - என்று கூறி; வானவருக்கும் - தேவர்களுக்கும்; நாண அடுக்கும் வசை - வெட்கம் ஏற்படுத்தும் இழிவு அது என்றான். (மன்னோ - அசை). மாரீசனின் அன்பைப் பெறும் பொருட்டுத் தன் நிலையை இவ்வாறு தாழ்த்தித் தெரிவித்தான், இராவணன் 3 3240. | 'வன்மை தரித்தோர் மானிடர்; மற்று அங்கு, அவர் வாளால் நின் மருகிக்கும் நாசி இழக்கும் நிலை நேர்ந்தார்; என் மரபுக்கும் நின் மரபுக்கும் இதன்மேல் ஓர் புன்மை, தெரிப்பின், வேறு இனி எற்றே? புகல்-வேலோய்! |
வேலோய் - வேலேந்தியவனே; மானிடர் வன்மை தரித்தோர் - மனிதர்கள் வல்லமை உடையோர் ஆயினார்; மற்று அங்கு அவர் - மேலும் அக்கானகத்தில் அவர்கள்; வாளால் - தம் வாள் வலிமையால்; நின் மருகிக்கும் - உன் மருமகள் முறைமை வாய்ந்த சூர்ப்பணகைக்கும்; நாசி இழக்கும் நிலை - மூக்கை இழக்கின்ற நிலையினை; நேர்ந்தார் - உண்டு பண்ணிவிட்டனர்; தெரிப்பின் - ஆய்ந்து பார்த்தால்; என் மரபுக்கும் - என் பரம்பரைக்கும்; நின் மரபுக்கும் - (எனக்கு உறவாகிய) உன் பரம்பரைக்கும்; இதன் மேல் ஓர் புன்மை - இதனைக் காட்டிலும் ஒரு பேரிழிவு; இனி வேறு எற்றே - இனி வேறு என்ன இருக்கிறது; புகல்- சொல்லுவாயாக. |