பக்கம் எண் :

470ஆரணிய காண்டம்

இராவணன் சீதையைக் கவரத் துணையாகுமாறு வேண்டுதல்

3239.'ஆனது அனைத்தும்; ஆவி
     தரித்தேன், அயர்கின்றேன்;
போனது, பொற்பும்; மேன்மையும்
     அற்றேன், புகழோடும்;
யான் அது உனக்கு இன்று எங்ஙன்
     உரைக்கேன் இனி?' என்னா,
'வானவருக்கும் நாண அடுக்கும்
     வசை மன்னோ?'

    அனைத்தும் ஆனது - (நிகழ வேண்டாதன) பலவும் நிகழ்ந்து
விட்டன; ஆவி தரித்தேன் - எனினும் உயிர் பிழைத்திருந்தேன்; அயர்
கின்றேன் -
இன்னும் தளர்ச்சியுறுகின்றேன்; பொற்பும் போனது - என்
பொலிவும் நீங்கியது; புகழோடும் மேன்மையும் அற்றேன் - என்
பெருமைகளும், புகழும் அகன்றன; யான் இன்று உனக்கு - நான்
இப்போது உன் பால்; இனி அது எங்ஙன் உரைக்கேன் - இனி அது பற்றி
எவ்வாறு எடுத்துச் சொல்வேன்?; என்னா - என்று கூறி; வானவருக்கும் -
தேவர்களுக்கும்; நாண அடுக்கும் வசை - வெட்கம் ஏற்படுத்தும் இழிவு
அது என்றான். (மன்னோ - அசை).

     மாரீசனின் அன்பைப் பெறும் பொருட்டுத் தன் நிலையை இவ்வாறு
தாழ்த்தித் தெரிவித்தான், இராவணன்                              3

3240.'வன்மை தரித்தோர் மானிடர்; மற்று
     அங்கு, அவர் வாளால்
நின் மருகிக்கும் நாசி இழக்கும்
     நிலை நேர்ந்தார்;
என் மரபுக்கும் நின்
     மரபுக்கும் இதன்மேல் ஓர்
புன்மை, தெரிப்பின், வேறு இனி
     எற்றே? புகல்-வேலோய்!

    வேலோய் - வேலேந்தியவனே; மானிடர் வன்மை தரித்தோர் -
மனிதர்கள் வல்லமை உடையோர் ஆயினார்; மற்று அங்கு அவர் -
மேலும் அக்கானகத்தில் அவர்கள்; வாளால் - தம் வாள் வலிமையால்;
நின் மருகிக்கும் - உன் மருமகள் முறைமை வாய்ந்த சூர்ப்பணகைக்கும்;
நாசி இழக்கும் நிலை - மூக்கை இழக்கின்ற நிலையினை; நேர்ந்தார் -
உண்டு பண்ணிவிட்டனர்; தெரிப்பின் - ஆய்ந்து பார்த்தால்; என்
மரபுக்கும் -
என் பரம்பரைக்கும்; நின் மரபுக்கும் - (எனக்கு உறவாகிய)
உன் பரம்பரைக்கும்; இதன் மேல் ஓர் புன்மை - இதனைக் காட்டிலும்
ஒரு பேரிழிவு; இனி வேறு எற்றே - இனி வேறு என்ன இருக்கிறது;
புகல்- சொல்லுவாயாக.