வஞ்சியை வௌவ - சீதையைக் கவர்ந்து வர; துணை கொண்டிட்டு - உன் உதவியை மேற்கொள்ள வேண்டியும்; இப்பழி நின்னால் தீரிய - எனக்கு நேர்ந்த அவமானத்தை உன்னால் துடைப்பதற்கு வேண்டியும்; இவண் வந்தேன் - இங்கு (உன்பால்) வந்தேன்; என்றான் - என்று இராவணன் மொழிந்தான். என்னுடைய சகோதரியை அவர்கள் இழிவுபடுத்தியதால்அவர்களுடன் இருக்கும் சீதையைக் கவர்ந்து அவர்களைஇழிவுபடுத்துவேன் எனத் துணை நாடினான் இராவணன். 6 மாரீசன் அறிவுரை 3243. | இச் சொல் அனைத்தும் சொல்லி, அரக்கன், எரிகின்ற கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன் என்னக் கிளராமுன், 'சிச்சி' என, தன் மெய்ச் செவி பொத்தி; தெருமந்தான்; அச்சம் அகற்றி, செற்ற மனத்தோடு அறைகின்றான்; |
எரிகின்ற கிச்சின் - பற்றி எரியும் தீயில்; உருக்கு இட்டு - இரும்பைப் போட்டுக் காய்ச்சி; உய்த்தனன் என்ன - அதனைச் செவியில் பாய்ச்சினாற் போன்று; அரக்கன் - இராவணன்; இச்சொல் அனைத்தும் சொல்லி - இவ்வாறு (தன் உணர்வுகளைச் சுமந்த) சொற்களை எல்லாம் கூறி; கிளராமுன் - தூண்ட முற்படு முன்; (மாரீசன்); சிச்சி எனத்தன் மெய்ச் செவி பொத்தி - சீச்சீ என்று தன் செவிகளை மூடி; தெருமந்தான் - தடுமாறினான்; (அதன் பிறகு); அச்சம் அகற்றி - இராவணனிடம் கொண்ட பயத்தை நீக்கி; செற்ற மனத்தோடு - சினம் பொங்கும் உள்ளத்தோடு; அறைகின்றான் - சொல்லத் தொடங்கினான். கிச்சு - நெருப்பு; கிருசாநு என்ற வடசொல்லின் திரிபு என்பர், உருக்கு - உருக்கப்படுவதால் பெற்ற காரணப் பெயர். 7 3244. | 'மன்னா! நீ உன் வாழ்வை முடித்தாய்; மதி அற்றாய்; உன்னால் அன்று ஈது; ஊழ்வினை என்றே உணர்கின்றேன்; இன்னாவேனும் யான் இது உரைப்பென் இதம்' என்னா, சொன்னான் அன்றே அன்னவனுக்குத் துணிவு எல்லாம். |
|