உன் எண்ணப்படி (சீதையைச் சிறைபிடிப்பதில் வெற்றி பெற்றாலும்; உலகு ஈன்றான் இராமன் - உலகையெல்லாம் படைத்தளிக்கும் இராமபிரான்; வைதால் அன்ன வாளிகள் கொண்டு - (முனிவர்) சாபம் போன்ற கூரிய அம்புகளால்; உன்குழு எல்லாம் - உன் இனம் முழுவதையும்; உன் வழியோடும் - உன் சந்ததிகளோடும் சேர்த்து; கொற்றம் முடித்து - உங்கள் வெற்றி (வரலாறு) முடித்து; கொய்தான் அன்றே - நிச்சயமாய் அழித்துவிடுவான். பாவம் மறுமையையும், பழி இம்மையையும் அழிக்கும் என்பது கருத்து. உன்னால் உன் குலமும் அழியும் என எச்சரித்தான். வைதாலன்ன வாளிகள் - பால காண்டம் தாடகை வதைப் படலத்தில், 'சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம்' (378) என்பதனோடு ஒப்பு நோக்கத்தக்கது. எய்தாது, எய்தாது - அடுக்கு, உறுதியை வலியுறுத்தியது. நிகழ்ந்தே தீருமென்ற உறுதியால் கொய்தான் என்று இறந்த காலத்தில் குறித்தான்; கால வழுவமைதி. 13 3250. | 'என்றால், என்னே! எண்ணலையே நீ, கரன் என்பான், நின் தானைக்கு மேல் உளன் என்னும் நிலை? அம்மா! தன் தானைத் திண் தேரொடும் மாளத் தனு ஒன்றால் கொன்றான்; முற்றும் கொல்ல, மனத்தில் குறிகொண்டான். |
என்றால் - இவ்வாறு நான் அறிவுரை கூறினாலும்; என்னே நீ எண்ணலையே - ஏனோ நீ சிந்தித்துப் பார்க்க மறுக்கின்றாயே; நின் தானைக்கு மேல் என்னும் நிலை உளன் - உன் படைகளுக்குத் தலைவனாக உயர் நிலையில் இருந்த; கரன் என்பான் - கரன் என்னும் வீரன்; தன் தானை - தன் சேனைகளோடும்; திண் தேரொடும் மாள - வலிமை மிக்க தேர்ப் படைகளோடும் அழியும்படி; தனு ஒன்றால் கொன்றான் - ஒப்பற்ற தன் வில்லால் கொன்ற இராமன்; முற்றும் கொல்ல- அரக்கர் இனம் முழுதையும் அழிக்க; மனத்தில் குறி கொண்டான் - இப்போது மனத்திற் கருதி இருக்கின்றான்; அம்மா - இந்நிலை இரங்கத்தக்கது. கரன் முதலியோரை அழித்தமை அவன் 'கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவன்' என்பதைக் காட்டும். அவ்வாறிருந்தும் நீ அறிவு பெற்றாய் இல்லை என்றான் மாரீசன். 14 3251. | 'வெய்யோர் யாரே, வீர விராதன் துணை வெய்யோர்? | |