| இகழ்ந்தனை; எனக்கு இளைய நங்கை முகம் எங்கும் அகழ்ந்த வரை ஒப்பு உற அமைத்தவரை, ஐயா! புகழ்ந்தனை; தனிப் பிழை; பொறுத்தனென் இது' என்றான். |
'நிகழ்ந்ததை நினைத்திலை - (நம் குலத்துக்கு) நேர்ந்த அவமானத்தை நீ எண்ணவில்லை; என் நெஞ்சின் நிலை - என் மன உறுதி நிலையை; அஞ்சாது இகழ்ந்தனை - சற்றும் பயமின்றி இகழ்ச்சி செய்தாய்; எனக்கு இளைய நங்கை முகம் எங்கும் - என் தங்கை சூர்ப்பணகையின் முகத்தையெல்லாம்; அகழ்ந்த வரை ஒப்புற அமைத்த வரை - குடைந்த மலை போலாகும்படி தீமை செய்தவரை; புகழ்ந்தனை - புகழ்ந்தும் பேசினாய்; ஐயா - ஐயனே!; தனிப்பிழை இது - இப் பெருங் குற்றத்தை; பொறுத்தனென் - மன்னித்தேன்; என்றான் - என இராவணன் கூறினான். குலப்பழி பொறுத்தல், இராவணன் ஆற்றலை இகழ்தல், தங்கைக்குத் தீமை செய்தாரைப் புகழ்தல் என்பன தனிப்பிழை என்றான் இராவணன்.20 மீண்டும் மாரீசன் கூறுதல் 3257. | தன்னை முனிவுற்ற தறுகண் தகவிலோனை, பின்னை முனிவுற்றிடும் எனத் தவிர்தல் பேணான் 'உன்னை முனிவுற்று உன் குலத்தை முனிவுற்றாய்; என்னை முனிவுற்றிலை; இது என்?' என இசைத்தான். |
தன்னை முனிவுற்ற - தன் மீது சினம் கொண்ட; தறுகண் - வீரம் உடையவனும்; தகவு இலோனை - பெருமை இல்லாதவனுமான இராவணனை; பின்னை முனிவுற்றிடும் எனத் - மேலும் தன் மீது கோபம் கொள்ளுவான் என்பதனால்; தவிர்தல் பேணான் - அறிவுரை கூறாது விலக விரும்பாதவனாய்; 'உன்னை முனிவுற்று - உன்னோடு நீயே சினம் கொண்டு; உன் குலத்தை முனிவுற்றாய் - உன் குலத்தோடும் சினம் கொண்டாய்; (உண்மையில்); என்னை முனிவுற்றிலை - என்னோடு சினமுற்றாய் இல்லை; இது என் - ஏன் இவ்வாறு செய்கிறாய்'; என இசைத்தான் - என்று கேட்டான். உன் சினம் எனக்குச் செய்யும் அழிவினும் உனக்கும் குலத்துக்கும் அழிவு தருவதாகும் என மாரீசன் சுட்டிக் காட்டுகிறான்.21 |