3258. | 'எடுத்த மலையே நினையின், "ஈசன், இகல் வில்லாய் வடித்த மலை, நீ இது, வலித்தி" என, வாரிப் பிடித்த மலை, நாண் இடை பிணித்து ஒருவன் மேல்நாள் ஒடித்த மலை, அண்ட முகடு உற்ற மலை அன்றோ? |
எடுத்த மலையே நினையின் - கயிலையங்கிரியை எடுத்ததையே பெரிதாக நீ கருதினால்; ஈசன் இகல் வில்லாய் வடித்த மலை - இது சிவபெருமான் முன்பு வளைத்து வில்லாய்ப் பிடித்த மேருமலை போன்றது; நீ இது வலித்தி என - இதனை நீ வளைப்பாயாக (என்று சனகன் கூற); வாரிப் பிடித்த மலை - அள்ளியெடுத்துப் பிடித்த மலைக்கு நிகரானதும்; ஒருவன் - ஒப்பற்ற இராமன் (அன்று); நாணிடைப் பிணித்து - நாண் கயிற்றைப் பற்றி; மேல் நாள் - முன்னொருநாள்; ஒடித்த மலை - ஒடித்த மலைக்கு நிகரானதுமான வில்; அண்ட முகடு - உச்சி வானத்தை; உற்ற மலை அன்றோ - தழுவிய மேரு மலை போன்றதே அன்றோ? நீ எடுத்தது கயிலை மலை. ஆனால் இராமன் ஒடித்த வில் அதனினும் மேலான மேருமலை போன்றது. இதனால் வலிமையினை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுகிறான். சொற்பொருட் பின்வருநிலை அணி. 22 3259. | 'யாதும் அறியாய்; உரை கொளாய்; இகல் இராமன் கோதை புனையாமுன், உயிர் கொள்ளைபடும் அன்றே; பேதை மதியால், "இஃது ஓர் பெண் உருவம்" என்றாய்; சீதை உருவோ? நிருதர் தீவினை அது அன்றோ? |
'யாதும் அறியாய் - இராமன் வலிமை முதலானவற்றை முழுதும் அறியாதவன் நீ; உரை கொளாய் - எடுத்துச் சொன்னாலும் உணர மறுக்கிறாய்; இகல் இராமன் கோதை புனையா முன் - உன் பகையாய் நீ கருதும் இராமன் போர் புரியத் தும்பை மாலை சூடு முன்; உயிர் கொள்ளை படும் அன்றே - அவன் பகைவர் உயிர் சூறையாடப்படும் அன்றோ?; பேதை மதியால் - அறியாமை கொண்ட மதியால்; இஃது ஓர் பெண் உருவம் என்றாய் - (சீதையை) ஒரு மனிதப் பெண்ணாக மதித்திருக்கின்றாய்; அது சீதை உருவோ? - உண்மையில் அது சீதையின் வடிவமோ? (அன்று); |