சேர்த்து முழுவதிலுமாய்; கோசிகன் அளித்த கடவுட் படை - விசுவாமித்திர முனிவனால் வழங்கப்பட்ட தெய்வ அம்புகள்; கொதிப்போடு- பொங்கும் அனலோடு; ஓர் இமைப்பின் உயிர் தின்ப - இமைப் பொழுதில் உயிரைப் பருகி முடிக்கும் வல்லமை உடையன; ஆசில - குற்றம் (தோல்வி) அறியாதவை; கணிப்புஇல் - கணக்கில்லாதவை; இராமன் அருள் நிற்ப - இராமபிரானிடம் (ஏவல் பூண்டு) அருள் காத்து நிற்பனவாம். தாடகை வதம் முடிந்து வேள்வி காத்தபின் விசுவாமித்திரரும், முனிவரும் அளித்த தெய்வப் படைகள் பல இராமனிடம் பொருந்தி உள்ளன. இது குறித்துப் பால காண்டம் வேள்விப் படலம் (394, 395, 396) கௌசிகன் - விசுவாமித்திர முனிவர். குசிகன் குலத்தில் பிறந்தோன். 25 3262. | 'வேதனை செய் காம விடம் மேலிட மெலிந்தாய்; தீது உரைசெய்தாய்; இனைய செய்கை சிதைவு அன்றோ? மாதுலனும் ஆய், மரபின் முந்தை உற வந்தேன், ஈது உரை செய்தேன்; அதனை, எந்தை! தவிர்க' என்றான். |
வேதனை செய் காம விடம் - துயரம் தருகின்ற காமம் என்ற நஞ்சு; மேலிட மெலிந்தாய் - மிகுதிப்படச் சோர்வுற்றாய்; தீது உரை செய்தாய் - கொடுஞ் சொற்களையும் கூறினாய்; இனைய செய்கை சிதைவு அன்றோ - இவ்வாறு செய்தல் அழிவு ஆகுமன்றோ?; மாதுலனும் ஆய் - உனக்கு மாமன் உறவுடையவனாய்; மரபின் முந்தை உற வந்தேன் - உன் குலத்தில் முந்திப் பிறந்தவனானேன்; ஈது உரை செய்தேன் - இம்மொழிகளை உனக்குச் சொன்னேன்; எந்தை - என ஐயா; அதனைத் தவிர்க - இத்தீய கருத்தை விட்டு விடுக; என்றான் - என (மாரீசன் இராவணனுக்கு மறுபடியும் அறிவுரை பகன்றான். உன் குலத்து முந்தியவன் என்பதால் நீ என்னைக் கடிந்த போதும் நல்லன கூறினேன் என அறிவுரை கூறினான் மாரீசன். மாதாவின் உடன் பிறப்பு மாதுலன். 26 3263. | என்ன, உரை அத்தனையும், எத்தனையும் எண்ணிச் சொன்னவனை ஏசின அரக்கர் பதி சொன்னான்: |
|