விட்டு - எடுத்துக் கூறும் இந்தச் செயலை விட்டொழித்து; உயிர் கொண்டு உழலின் - அவ்வாறு செய்தால் உயிரோடு பிழைக்கலாகும்; என் குறிப்பின் வழி நிற்றி - என் கருத்தின் வழியே நின்று செயல் புரிவாயாக; என்றான்- என்று (இராவணன் மாரீசனுக்குக்) கூறினான். அறிவுரைகளை ஏற்கும் நிலையில் அவன் இல்லை என்பதையும், முடிவுகளை எடுத்த நிலையில் உள்ளான் என்பதையும் இராவணன் பேச்சுப் புலப்படுத்துகின்றது. 30 மாரீசன் உடன்படல் அறுசீர் ஆசிரிய விருத்தம் 3267. | அரக்கன் அஃது உரைத்தலோடும், அறிந்தனன் அடங்கி, ' "நெஞ்சம் தருக்கினர் கெடுவர்" என்றல் தத்துவ நிலையிற்று அன்றோ? "செருக்குநர்த் தீர்த்தும்" என்பார்தம்மின ஆர் செருக்கர்?' என்னா, உருக்கிய செம்பின் உற்ற நீர் என, உரைக்கலுற்றான்: |
அரக்கன் அஃது உரைத்தலோடும் - இராவணன் அவ்வாறு கூறியதும்; அறிந்தனன் அடங்கி - இராவணன் மனப்போக்கை அறிந்தவனாய் அடக்கம் மேற்கொண்டு; 'நெஞ்சம் தருக்கினர் கெடுவர்' என்றல் - மனச் செருக்குக் கொண்டவர்கள் அழிவார்கள் என்பது; தத்துவ நிலையிற்று அன்றோ - ஆழ்ந்த தத்துவ நிலையுடையது அல்லவா? (மேலும்); "செருக்குநர்த் தீர்த்தும்" என்பார் தம்மின் - செருக்கு உற்றவர்களை அழித்துவிடுவோம் என்று கருதுவோரைவிட; ஆர் செருக்கர் - மிகுந்த செருக்கு உடையவர்கள் யார்?; என்னா - என்று மனத்துள் நினைத்து; உருக்கிய செம்பின் உற்ற நீர் என - உருக்கப்பட்ட செம்பின் மீது பட்ட தண்ணீர்த்துளி வற்றுதல் போல; (வேகம் குன்றி); உரைக்கலுற்றான் - மாரீசன் பேசலுற்றான். தருக்குற்றார் அழிவர். தருக்குற்றவனைத் திருத்துதலும் பேதைமை என உணர்ந்து மாரீசன் அடங்கினான். மாரீசனின் உணர்வு முற்றும் அடங்கினமைக்கு உருக்கிய செம்பின் உற்ற நீர் உவமை.31 3268. | உன்வயின் உறுதி நோக்கி, உண்மையின் உணர்த்தினேன்; மற்று, என்வயின் இறுதி நோக்கி, அச்சத்தால் இசைத்தேன் அல்லேன்; |
|