பக்கம் எண் :

மாரீசன் வதைப் படலம் 487

நன்மையும் தீமை அன்றே, நாசம்
     வந்து உற்ற போது?
புன்மையின் நின்ற நீராய்!
     செய்வது புகல்தி' என்றான்.

    'உன்வயின் உறுதி நோக்கி - (இராவணனாகிய) உன் நலத்தினை
நாடி; உண்மையின் உணர்த்தினேன் - உண்மையாகவே எடுத்துக்
கூறினேன்; மற்று - அவ்வாறன்றி; என்வயின் இறுதி நோக்கி - எனக்கு
அழிவு நேரும் என்று கருதி; அச்சத்தால் இசைத்தேன் அல்லேன் -
பயம் காரணமாக நான் அறிவுரை கூறினேன் இல்லை; நாசம் வந்து
உற்றபோது -
அழிவு நெருங்கி வரும் நேரத்தில்; நன்மையும் தீமை
அன்றே -
நல்லது சொன்னாலும் அது தீமையாகவே கருதப்படும்
அல்லவா?; புன்மையின் நின்ற நீராய் - தீய நெறியில் செல்லும் தன்மை
உடையவனே; செய்வது புகல்தி - நான் செய்ய வேண்டியதைச் செப்புக';
என்றான் - என மாரீசன் (உடன்பட்டுப்) பேசினான்.                32

சீதையை அடையச் செய்திடும் சூழ்ச்சி

3269. என்றலும், எழுந்து புல்லி
     ஏறிய வெகுளி நீங்கி,
'குன்று எனக் குவிந்த தோளாய்!
     மாரவேள் கொதிக்கும் அம்பால்
பொன்றலில் இராமன் அம்பால் பொன்றலே
     புகழ் உண்டு அன்றோ?
தென்றலைப் பகையைச் செய்த
     சீதையைத் தருதி' என்றான்.

    என்றலும் - இவ்வாறு மாரீசன் கூறியதும்; எழுந்து புல்லி -
இராவணன் எழுந்து அவனைத் தழுவி; ஏறிய வெகுளி நீங்கி - மேற்
பொங்கிய சினம் மாறி; 'குன்று எனக் குவிந்த தோளாய் - மலையெனத்
திரண்ட தோள்களை உடையவனே; மாரவேள் கொதிக்கும் அம்பால் -
மன்மதன் எய்த வேதனைக் கணையால்; பொன்றலில் - இறப்பதை விட;
இராமன் அம்பால் - இராமனுடைய அம்பினால்; பொன்றலே புகழ்
உண்டு அன்றோ -
இறத்தலால் புகழ் ஏற்படும் அல்லவா?; தென்றலைப்
பகையைச் செய்த -
இனிய தென்றலையும் கொடிய பகையாக மாற்றிவிட்ட;
சீதையைத் தருதி - சீதையை எனக்காகக் கொண்டு தருவாய்; என்றான் -
என்று இராவணன் வேண்டினான்.

     காமன் அம்பால் சாவதை விட இராமன் அம்பால் சாவது மேல்
என்றான் இராவணன் : எவ்வாறாயினும் பின்னர் நிகழவிருப்பதை முன்னரே
குறிப்பால் கூறுதல் கருதத்தக்கது.                                 33