நொய்து ஆருயிர் உண்டானை - உனது தாயான தாடகையை இழிவான முறையில் மிக எளிதில் அழித்தவனை; கொல - கொல்லுதற்கு; யான் சமைந்து நின்றேன் - நான் ஒருப்பட்டு நிற்கின்றேன்; ஐயா போய்ப் புணர்ப்பது என்னே - ஐயனே, போய்ச் செயத் தக்கது என்ன; என்பது - என நீ கேட்பது; பொருந்திற்று ஒன்றோ - பொருத்தமான கேள்விதானா?; அவளை - அச்சீதையை; மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல் - மாயம் செய்து வஞ்சனையால் அன்றோ பற்றுதல் வேண்டும்; என்றான் - என்று (இராவணன்) கூறினான். 'என்ன செய்வது என்பதும் ஒரு கேள்வியா? போரிடுவதில்லை என முன்னமே சொல்லியிருப்பதால் மாய வஞ்சமே வழி' என இராவணன் கூறினான். 35 3272. | 'புறத்து இனி உரைப்பது என்னே? புரவலன் தேவிதன்னைத் திறத்துழி அன்றி, வஞ்சித்து எய்துதல் சிறுமைத்து ஆகும்; அறத்து உளது ஒக்கும் அன்றே? அமர்த்தலை வென்று கொண்டு, உன் மறத் துறை வளர்த்தி, மன்ன!' என்ன மாரீசன் சொன்னான். |
மன்ன - வேந்தனே; புறத்து இனி உரைப்பது என்னே - இனி மேல் வேறு கூறுதற்கு யாது உள்ளது!; புரவலன் தேவி தன்னை - உலகு காக்கும் இராமனின் மனைவியை; திறத்துழி அன்றி - உன் திறன் காரணமாக அன்றி; வஞ்சித்து எய்துதல் - வஞ்சனையால் அடைதல் என்பது; சிறுமைத்து ஆகும் - உன் தகுதிக்குத் தாழ்வானது ஆகும்; அமர்த்தலை வென்று கொண்டு - போரில் இராமனை வெற்றி கொண்டு; உன் மறத்துறை வளர்த்தி - உன் வீரத் தகுதியை வளர்த்துக் கொள்வாயாக; அறத்து உளது ஒக்கும் அன்றே - அவ்வாறு செய்வது நீதியின் மரபுக்குப் பொருந்துவதும் ஆகும் அல்லவா?; என்ன மாரீசன் சொன்னான் - என்று மாரீசன் இராவணனிடம் கூறினான். உன் தகுதிக்கும் பெருமைக்கும் வஞ்சனை தக்கதன்று; வீரத்தால் வெல்லுவதே மேன்மை என்று மாரீசன் கூறினான். 36 3273. | ஆனவன் உரைக்க, நக்க அரக்கர்கோன், 'அவரை வெல்லத் தானையும் வேண்டுமோ? என் தடக் கை வாள் தக்கது அன்றோ? |
|