| | ஏனையர் இறக்கின், தானும் தமியளாய் இறக்கும் அன்றே மானவள்? ஆதலாலே, மாயையின் வலித்தும்' என்றான். |
ஆனவன் உரைக்க - உறவுடையவனான மாரீசன் இவ்வாறு கூறுதலும்; நக்க அரக்கர் கோன் - அது கேட்டுச் சிரித்த இராவணன்; அவரை வெல்ல - அம் மானுடரை வெற்றி கொள்ள; தானையும் வேண்டுமோ - சேனையும் அவசியம் தானோ?; என் தடக்கை வாள் தக்கது அன்றோ - என் வலிமைமிக்க கரங்களில் ஏந்திய வாள் ஒன்றுமே போதாதோ? (போதும் என்றாலும்); ஏனையர் இறக்கின் - தன்னைச் சார்ந்த இராமலக்குவர் மாய்வராயின்; மானவள் - மானுடப் பெண்ணான சீதையும்; தானும் தமியளாய் - தானும் தனித்திருக்கும் நிலை கருதி; இறக்கும் அன்றே - மடிந்து போவாள் அல்லவா?; ஆதலாலே மாயையின் வலித்தும் - அக்காரணத்தால் அவளை மாய வஞ்சனையில் கைப்பற்றுவோம்; என்றான் - என்று சொன்னான். மானவள் - மானுடப் பெண்; மான் போன்றவள், மானம் மிக்கவள் எனப் பல பொருள் விரிக்க இடம் தருகிறது. வஞ்சனை செய்ய வாய்ப்பான காரணம் கற்பிக்கின்றான் இராவணன். வஞ்சனைச் செயலுக்குச் சீதையிடம் இராவணன் வேறு ஒரு காரணம் சொல்வதை இராவணன் சூழ்ச்சிப் படலத்தில் காணலாம். (3401) 37 | 3274. | 'தேவியைத் தீண்டாமுன்னம், இவன் தலை சரத்தின் சிந்திப் போம்வகை புணர்ப்பன் என்று, புந்தியால் புகல்கின்றேற்கும் ஆம் வகை ஆயிற்று இல்லை; யார் விதி விளைவை ஓர்வார்? ஏவிய செய்வது அல்லால், இல்லை வேறு ஒன்று' என்று எண்ணா, |
தேவியைத் தீண்டா முன்னம் - இராமன் துணைவியான சீதையைத் தொடு முன்னரே; இவன் தலை சரத்தின் சிந்தி - இவ்விராவணன் தலைகளை இராமன் அம்பால் வீழ்த்தி; போம் வகை புணர்ப்பன் - விழும் வகையைச் செய்யலாம்; என்று புந்தியால் புகல்கின்றேற்கும் - என்று தந்திரத்தால் சொல்ல வல்ல எனக்கும்; ஆம் வகை ஆயிற்று இல்லை - (அதனைச் செய்து) பிழைக்கும் வழி புலனாகவில்லை; விதி விளைவை ஓர்வார் யார்? - விதியின் செயல்பாட்டை முற்றும் அறிந்தவர் யார்?; ஏவிய செய்வது அல்லால் - இராவணன் இட்ட கட்டளையை நிறைவேற்றுவதல்லாமல்; வேறு |