சீதை மாயமானை விரும்பியதற்குக் காரணம் இராவணன் அழிவும், அறத்தின் புத்துயிர்ப்பும் ஒரு சேர நடைபெறும் காலம் நெருங்கியதால் என்றார். 47 மானைக் கண்டு மயங்கிய சீதை இராமனை அடைதல் 3284. | நெற்றிப் பிறையாள் முனம் நின்றிடலும், முற்றிப் பொழி காதலின் முந்துறுவாள், 'பற்றித் தருக என்பென்' எனப் பதையா, வெற்றிச் சிலை வீரனை மேவினளால். |
நெற்றிப் பிறையாள் முனம் - இளம் பிறை போலும் நெற்றியை உடைய சீதை முன்; நின்றிடலும் - (மாய மான் வந்து) நிற்கவும்; முற்றிப் பொழி காதலின் - (அவள்) நிறைந்த ஆசை ததும்பி நிற்க; 'பற்றித் தருக' என்பென் - 'இம் மானைப் பிடித்துத் தரவேண்டும்' என்று இராமனைக் கேட்பேன்; எனப் பதையா - என உணர்ச்சி மிக்கவளாய்; (சீதை); வெற்றிச் சிலை வீரனை - வில்லால் வெற்றி கொள்ளும் வீரனாகிய இராமனை; முந்துறுவாள்; மேவினள் - அடைந்தாள். (ஆல் - அசை) 48 3285. | 'ஆணிப் பொனின் ஆகியது; ஆய் கதிரால் சேணில் சுடர்கின்றது; திண் செவி, கால், மாணிக்க மயத்து ஒரு மான் உளதால்; காணத் தகும்' என்றனள், கை தொழுவாள். |
(இராமனிடம் சென்று சீதை); 'ஆணிப் பொனின் ஆகியது - மாற்றுயர்ந்த பொன்னால் ஆனதும்; ஆய் கதிரால் சேணில் சுடர்கின்றது- சிறந்த ஒளியினால் தொலைவிலும் பளபளக்கின்றதும்; திண்செவி கால் - வலிய காதுகளும் கால்களும்; மாணிக்க மயத்து - சிவந்த மாணிக்கங்களால் ஆகியதுமான; ஒரு மான் உளது - ஒரு மான் காட்சி தருகின்றது; காணத் தகும் - அழகால் காண்பதற்கு இனிதானது; என்றனள்- என்று கூறியவளாய்; கைதொழுவாள் - (அதனைப் பற்றி அளிக்க வேண்டுமெனக் கருதி) கையால் வணங்கி நின்றாள்; ஆல் - அசை. |