அவ்விடத்துத் தன் கருத்தை உரைக்கலானான். ஆல் - அசை. கேட்டதைக் கொடுப்பவன் என்பதால் வள்ளல் என்றார். உரிய சமயத்தில் இலக்குவன் குறுக்கிட்டான். 51 3288. | 'காயம், கனகம்; மணி, கால், செவி, வால்; பாயும் உருவோடு இது பண்பு அலவால்; மாயம் எனல் அன்றி, மனக் கொளவே ஏயும்? இறை மெய் அல' என்ற அளவே. |
'காயம் கனகம் - (அம்மானின்) உடல் பொன்னிறமாய் உள்ளது; கால் செவி வால் மணி - காலும், காதும், வாலும் மாணிக்க மயமாய் உள்ளன; பாயும் உருவோடு இது - வேகமாகப் பாய்ந்தோடும் வடிவோடு கூடிய இம்மான்; பண்பு அல - இயற்கைப் பண்போடு கூடியதன்று; மாயம் எனல் அன்றி - இது ஒருவகை மாயை என்று கருதுதலே அல்லாமல்; மனக் கொளவே ஏயும் - வேறு விதமாகக் கருதுதல் பொருந்துமோ?; இறை - என் தலைவனே; மெய் அல - எவ்வகையிலும் இது உண்மையானது அன்று; என்ற அளவே - என இலக்குவன் கூறும் அளவில்.... (அடுத்த செய்யுளில் பொருள் முடிவுறும்). 52 இராமன் பதிலுரை 3289. | நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன் உயிர்தாம் பல் ஆயிரம்கோடி பரந்துளதால்; இல்லாதன இல்லை-இளங்குமரா! |
இளங்குமரா - இளமையுடைய தம்பி!; நேர்மையினால் வல்லாரும் - முறையான அறிவிலே திறமை சான்றவரும்; நில்லா உலகின் நிலை உணர்ந்திலர் - நிலையில்லா உலகின் தன்மை முற்றும் அறிந்ததில்லை; மன் உயிர்தாம் - வாழும் நிலை பெற்ற உயிரினங்களோ எனில்; பல் ஆயிரம் கோடி பரந்துளது - எண்ணிலாக் கோடிகளாய் விரிந்து பரந்து உள்ளன; இல்லாதன இல்லை - இவ்வுலகில் இல்லாதவை என்று (நம் அறிவை மட்டும் வைத்து) எவற்றையும் விலக்கிக் கூற முடியாது' (என்றான் இராமன்); ஆல் - அசை. |