பக்கம் எண் :

502ஆரணிய காண்டம்

முன் அடியில் உவமை கூற முடியாது என்றவர் கடைசி அடிகளில்
பல்வேறு உவமைகளால் உறுப்புக்களை வருணித்தார். உறுப்புக்களுக்கு
உவமை கூற முற்படினும் முழுமையான தோற்றப் பொலிவிற்கு அத்தகு
பொருள் ஏதும் இன்மையின் உவமை கூற முடியாது என்றார் எனக்
கொள்க.                                                    58

3295.'வரி சிலை மறை வலோனே! மான்
     இதன் வடிவை, உற்ற
அரிவையர், மைந்தர், யாரே
     ஆதரம் கூர்கிலாதார்?
உருகிய மனத்த ஆகி, ஊர்வன,
     பறப்ப, யாவும்
விரி சுடர் விளக்கம் கண்ட விட்டிலின்
     வீழ்வ காணாய்!'

    'வரிசிலை மறை வலோனே - கட்டமைந்த வில்லின்கலையாகிய
வேதத்தில் வல்லவனே!; மான் இதன் வடிவை - இம்மானின் உருவத்தை;
உற்ற - நெருங்கிக் கண்ட; அரிவையர் மைந்தர்- பெண்களானாலும்
ஆண்களானாலும்; யாரே ஆதரம்கூர்கிலாதார்? - (இதனிடம்) ஆசை
கொள்ளாதவர் யாராவது இருக்கமுடியுமா?; உருகிய மனத்த ஆகி -
உள்ளம் கரைந்துருகுவனவாகி;ஊர்வன, பறப்ப யாவும் - ஊர்ந்தும்
பறந்தும் செல்லும் அனைத்துவிலங்குகளும் பறவைகளும்; விரிசுடர்
விளக்கம் கண்ட -
எரியும்நெருப்புச் சுடரின் வெளிச்சம் பார்த்து;
விட்டிலின் வீழ்வ - விழும்விட்டில் பூச்சிகளைப் போல் விரும்பி அம்
மானைச் சூழ்வதை;காணாய் - நீ பாராய் (என்றான் இராமன்)

     உயிரினங்கள் அனைத்தும், ஆண் பெண் ஆன மானுடரும் இம்
மானைக் கண்டு மயங்குவதால் சீதையின் மயக்கத்தில் வியப்பில்லைஎன
இராமன் இலக்குவனுக்கு அமைதி காட்டுகின்றான்.                   59

3296. ஆரியன் அனைய கூற,
     அன்னதுதன்னை நோக்கி,
'சீரியது அன்று இது' என்று,
     சிந்தையில் தெளிந்த தம்பி,
'காரியம் என்னை, ஈண்டுக்
     கண்டது கனக மானேல்?
வேரி அம் தெரியல் வீர! மீள்வதே
     மேன்மை' என்றான்.

     ஆரியன் - மேன்மை மிக்க இராமன்; அனைய கூற - இவ்வாறு
எடுத்துக் கூறவும்; அன்னது தன்னை நோக்கி - அந்த மானை
உற்றுப் பார்த்து; 'இது சீரியது அன்று - இம்மான் இயற்கையானது
அன்று'; என்று