மந்திரத்து இளையோன் - எண்ணிச் சிந்திக்க வல்ல தம்பி இலக்குவன்; சொன்ன வாய்மொழி - எடுத்துக் கூறிய வாய்மை மிக்க மொழியை; சிகரச் செவ்விச் சுந்தரத் தோளினான் - மலையென உயர்ந்த அழகிய தோள்களை உடைய இராமன்; மனத்துக் கொள்ளான் - தன் மனத்தில் ஏற்றுக் கொள்ளாதவனாய்; சந்திரற்கு உவமை சான்ற - பூரணச் சந்திரனுக்கு உவமை கூறத்தக்க; வதனத்தாள் சலத்தை நோக்கி - முகத்தை உடைய சீதையின் கோபத்தையே எண்ணியவனாய்; சிந்துரப் பவளச் செவ்வாய் முறுவலன் - சிந்தூரமும் பவளமும் போன்ற சிவந்த இதழ்களில் புன்முறுவல் பூண்டவனாய்; அம்மானினைத் தொடரல் உற்றான் - அந்த மானைத் தொடர்ந்து செல்லத் தொடங்கினான். வாய்மொழி - வாய்மை ஆகிய மொழி. பண்புத் தொகை. வாயின் மொழி எனப் பொருள் கொண்டால் வேற்றுமைத் தொகை. இலக்குவனின் எச்சரிக்கையும், சீதையின் கோபமும்இராமனுக்குச் சிரிப்பைத் தந்தன, அவன் வீரனாகையால். 70 3307. | மிதித்தது மெல்ல மெல்ல; வெறித்தது வெருவி; மீதில் குதித்தது; செவியை நீட்டி, குரபதம் உரத்தைக் கூட்டி, உதித்து எழும் ஊதை, உள்ளம், என்று இவை உருவச் செல்லும் கதிக்கு ஒரு கல்வி வேறே காட்டுவது ஒத்தது அன்றே. |
(அந்த மாய மான்); மெல்ல மெல்ல மிதித்தது - மெதுவாய் மெதுவாய் நிலத்தில் ஊன்றி நடந்தது; வெருவி வெறித்தது - (பின்னர்) அஞ்சினாற் போல் வெறித்து நோக்கியது; செவியை நீட்டி - காதுகளை விறைத்து நீட்டியவாறு; குரபதம் உரத்தைக் கூட்டி - தன் கால் குளம்புகளை மார்புடன் ஒடுக்கி; மீதில் குதித்தது - வானேறித் தாவியது; உதித்து எழும் ஊதை - பொங்கி வரும் காற்று; உள்ளம் என்று இவை - மனம் என்னும் இவற்றை; உருவச் செல்லும் கதிக்கு - (வாயு வேகம், மனோ வேகம் என்கின்ற வேகங்களை) தாண்டிச் செல்லும் விரைவு நடைக்கு; ஒரு கல்வி - ஒரு புதிய பெயரைக் கற்பிக்கும்படி; வேறே காட்டுவது ஒத்தது - புதிதான நடையைக் காட்டுவதாய் அமைந்தது; அன்றே - ஈற்றசை. வாயு வேக, மனோ வேகங்களைக் கடந்த வேகத்தில் இம்மான் சென்றதால் புதிய பெயர் ஒன்று சூட்டும்படியாக அவ்வேகம் அமைந்தது என்றார். 71 3308. | நீட்டினான், உலகம் மூன்றும் நின்று எடுத்து அளந்த பாதம்; |
|