அக் கீழ்மகன் உடலை; நின்று உற நோக்கினான் - அருகில் நின்று உற்றுப் பார்த்தான் (இராமன்); மாசு இல் மாதவன் - குற்றம் இல்லாத பெருந்தவமுடைய விசுவாமித்திரனது; வேள்வியின் வந்த - யாக காலத்தில் வந்த; மாரீசனே இவன் - மாரீசனே இவன்; என்பதும் தேறினான் - என்பதனையும் உணர்ந்து கொண்டான். ஆசை - திக்க என்று பொருள்படும் வடசொல் இலக்குவன் உய்த்துணர்ந்த அரக்கன் மாயத்தை. இராமன் அனுபவித்தேஅறிந்தான். 79 3316. | 'புழைத்த வாளி உரம் புக, புல்லியோன், இழைத்த மாயையின், என் குரலால் இசைத்து அழைத்தது உண்டு; அது கேட்டு அயர்வு எய்துமால், மழைக் கண் ஏழை' என்று, உள்ளம் வருந்தினான். |
'புழைத்த வாளி - ஊடுருவிச் செல்லும் அம்பு; உரம் புக - தன் மார்பில் பட்டதும்; புல்லியோன் - இழிந்தவனாகிய மாரீசன்; இழைத்த மாயையின் - செய்த மாயத்தினால்; என் குரலால் இசைத்து - என் குரல் போன்ற குரலால் (சீதையையும் இலக்குவனையும்) கூவி; அழைத்தது உண்டு - அழைத்துள்ளான் அல்லவா?; அது கேட்டு் - அக்குரலைப் பிறழ உணர்ந்து; மழைக்கண் ஏழை - மழை போல் குளிர்ந்த கண்களை உடைய பேதை ஆகிய சீதை; அயர்வு எய்தும் - துன்பம் உறுவாள்'; என்று உள்ளம் வருந்தினான் - என்று மனம் நொந்தான் (இராமன்). ஆல்- அசை. மழைக் கண் - மழை போல் கண்ணீர் விடுகிற கண் என்றுமாம். 80 3317. | 'மாற்றம் இன்னது, "மாய மாரீசன்" என்று, ஏற்ற காலையின் முன் உணர்ந்தான் எனது ஆற்றல் தேரும் அறிவினன்; ஆதலால், தேற்றுமால் இளையோன்' எனத் தேறினான். |
இளையோன் - தம்பி இலக்குவன்; ஏற்ற காலையின் - மானை எதிர் கொண்ட அளவிலே; மாய மாரீசன் என்று முன் உணர்ந்தான்- மாயை செய்தவன் மாரீசன் என்று முன்னமே அறிந்து சொன்னான்; எனது ஆற்றல் |