ஏகுகின்றனென் - அடியேன் செல்கின்றேன்; வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ - கொடிய கோபமுள்ள ஊழினை வெல்ல வல்லமையுடையவர்களோ நாம்? (அல்லோம்) துஞ்சுதல் - இறத்தல்; மங்கல வழக்கு. அவலம் - துன்பம். தீயிற் பாயச் சென்ற சீதையைத் தடுத்த இலக்குவன் 'நீர் இறப்பானேன்' என்றான். அவள் அடி வீழ்ந்த செயலாலும், தன் பணிவைக் காட்டினான். ஊழிற் பெரு வலியாவுள காண்க. இதே இலக்குவன் 'விதிக்கும் விதியாகும் என் விற்றொழில் காண்டி' (130) என்று கூறியது ஒப்பு நோக்கத்தக்கது. வெஞ்சினம் எனக் குறித்ததால் இது தீவினை எனப்படும். இங்கு என்பது 'இஞ்சு' என எதுகை நோக்கித் திரிந்த போலி. 15 3334. | 'போகின்றேன் அடியனேன்; புகுந்து வந்து, கேடு ஆகின்றது; அரசன்தன் ஆணை நீர் மறுத்து, "ஏகு" என்றீர் இருக்கின்றீர் தமியிர்' என்று, பின் வேகின்ற சிந்தையான் விடைகொண்டு ஏகினான். |
அடியனேன் போகின்றேன் - அடியேன் இப்போதே செல்கின்றேன்; கேடு புகுந்து வந்து ஆகின்றது - பெரிய தீங்கு வலிந்து நம்மிடம் வந்துள்ளது; அரசன் தன் ஆணை நீர் மறுத்து ஏகு என்றீர் - இராமன் எனக்கிட்ட கட்டளையை நீங்கள் கடந்து என்னைப் 'போ' என்று சொல்கின்றீர்கள்; தமியிர் இருக்கின்றீர் - துணையின்றித் தனியே இருக்கின்றீர்கள்; என்று பின் வேகின்ற சிந்தையான் விடை கொண்டு ஏகினான் - எனக் கூறிப்பின் துயரால் வெந்து துடிக்கும் மனத்தையுடைய இலக்குவன் சீதையிடம் அனுமதி பெற்றுச் சென்றான். இராமன் சீதையைக் காக்குமாறு ஆணையிட்டது 'கான் இயல் மயில் அன்னாளைக் காத்தனை இருத்தி' என்ற பாடலில் (3204) தெரிகிறது. அதனை மீறுமாறு சீதை கூறுவதால் அதனால் வரும் தீங்குக்கு அவளே பொறுப்பு என்பதை இலக்குவன் சுட்டினான். 'எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு' (3331) எனக் கூறிய சீதையின் மொழி இலக்குவனை இவ்வாறு செயல்படச் செய்தது ’நின்ற நின்நிலை, இது, நெறியிற்று அன்று’ எனச் சீதை கூறிய சுடு மொழியால் (3330) 'வேகின்ற சிந்தை யான்' ஆயினான், இலக்குவன். 16 3335. | 'இருப்பெனேல், எரியிடை இறப்பரால் இவர்; பொருப்பு அனையானிடைப் போவெனே எனின், |
|