பக்கம் எண் :

இராவணன் சூழ்ச்சிப் படலம் 527

அருப்பம் இல் கேடு வந்து
     அடையும்; ஆர் உயிர்
விருப்பனேற்கு என் செயல்?'
     என்று, விம்மினான்.

    இருப்பெனேல் எரியிடை இவர் இறப்பர் - (சீதை கூறியவாறு
போகாமல்) இங்கிருப்பேனாயின் தீயிலே பிராட்டியார் வீழ்ந்து சாவார்;
பொருப்பு அனையானிடைப் போவெனே எனில் - மலை போன்ற
இராமனிடம் செல்வேனாயின்; அருப்பம் இல் கேடு வந்து
அடையும் -
காவலில்லாத தீங்கு பிராட்டிக்கு வந்து சேரும்;
ஆர்உயிர் விருப்பனேற்கு என் செயல் என்று விம்மினான் -
அரிய உயிர் மீது ஆசையுடைய எனக்கு எச் செயல் செய்வது என
எண்ணி ஏங்கினான். ஆல் - அசை.

     இராமனுக்கு மலை உவமை ஆகிறது. இதனை அருப்பம் -
அற்பம் எனவுமாம் தடையுமாம். ஆருயிர் விருப்பனேன் என்பதால்
உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணும் எண்ணம் குறிப்பாகப்
     புலப்படுகிறது. இதனால் இலக்குவன் தன்னையே வெறுக்கும்
மனநிலை உள்ளவன் என்பது தெரிகிறது.17

3336.'அறம்தனால் அழிவு இலது
     ஆகல் ஆக்கலாம்;
இறந்துபாடு இவர்க்கு உறும்,
     இதனின் இவ் வழித்
துறந்து போம் இதனையே துணிவென்;
     தொல் வினைப்
பிறந்து, போந்து, இது படும்,
     பேதையேன்' எனா,

    அறம் தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம் -
தருமத்தால் மட்டுமே அழிவு இல்லாமையை ஆக்குவது முடியும்;
இறந்து பாடு இவர்க்கு உறும் - (சீதை விருப்பப்படி போகாமல்)
நான் இங்கு (இருந்தால்) பிராட்டி இறந்து போவது உறுதி (ஆதலால்);
இதனின் இவ்வழித் துறந்து போம் இதனையே துணிவென் -
இவ்விடத்திலிருந்து செல்லும் இச் செயலைச் செய்யவே துணிவேன்;
தொல் வினைப் பிறந்து போந்து இதுபடும் பேதையேன் எனா -
பழவினையின் பயனாகப் பிறந்து இத்துன்பத்தை அடையும் அறிவிலாத
நான் என எண்ணி,

     தருமம் சீதையைக் காப்பாற்றட்டும் என்ற நம்பிக்கை இலக்குவன்
உள்ளத்தில் இருந்ததை இது காட்டும். நான் இருந்தால் இறப்பாள்,
எனவே இவ்விடம் விட்டு அகல்வதே நல்லது என இலக்குவன்
துணிந்தான். சீதையைக் காவல் காத்து அண்ணன் ஆணை வழி
நிற்பதா சீதை சொன்னபடி செல்வதா எனச் செய்வதறியாது
திகைக்கின்றமையால் தன்னைப்