பக்கம் எண் :

536ஆரணிய காண்டம்

     நல் நலம் - மிக்க அழகு. கார்முகப் படலத்தில் 'நல் நலத்துப்
பெண் அரசி தோன்றினாள்' (682) என வந்ததும் காண்க. சீதையின்
அழகின் எல்லையைக் காண முடியாது என்பது 'உமையாள் ஒக்கும்
மங்கையர் உச்சிக்கரம் வைக்கும் சுமையாள் மேனி கண்டனர் 'காட்சிக்
கரை காணார் என (504) முன்னும் வந்துளது.

     இராவணன் சிவபிரானிடம் வேண்டி மூன்றரைக் கோடி
ஆண்டுகளை வாழ் நாளாகப் பெற்றான். அதனைத் திருமால் சூழ்ச்சி
செய்து அரைக் கோடி ஆக்கிவிட்டார் என்பது புராண மரபு. தன்
ஆயுள் போதாது என்ற கூற்றுப் பின்வரும் தீங்குக்கு அறிகுறியாக
அமங்கலப் பொருள் தருவதாம்.                                30

3349.'தேவரும், அவுணரும்,
     தேவிமாரொடும்
கூவல்செய் தொழிலினர்,
     குடிமை செய்திட,
மூஉலகமும் இவர் முறையின்
     ஆள, யான்
ஏவல் செய்து உய்குவென், இனி'
     என்று உன்னினான்.

    தேவரும் அவுணரும் தேவிமாரொடும் - விண்ணவரும்
அசுரர்களும் தத்தம் மனைவியர்களுடன்; கூவல் செய் தொழிலினர்-
நான் கூப்பிட்டவுடன் இட்ட கட்டளைகளைச் செய்யும் தொழில்
உடையவர்களாய்; குடிமை செய்திட - வழிவழியாக அடிமை வேலை
செய்துவர; மூஉலகமும் இவர் முறையின் ஆள - மூன்று
உலகங்களையும் இப்பெண் உரிமை பெற்று ஆண்டு வர; இனியான்
ஏவல் செய்து உய்குவென் என்று உன்னினான் -
நான் இவர்
இட்ட பணிகளைச் செய்து ஈடேறுவேன் என்று இராவணன்
கருதினான்.

     கூவல் - கூவி அழைத்துக் குற்றேவல் செய்யப் பணித்தல்;
குற்றேவலுமாம். குடிமை - வழிவழியாக அடிமை. இராவணன்
முன்னர்ப் பெற்ற வாழ்வு தேவரும் அசுரரும் வழிவழியாக
அடிமையாக அவன் இட்ட பணியைச் செய்து உய்யும்படி அமைந்த
மேனிலைச் சிறப்புடையது. இப்போது அத்தகைய வாழ்வின்
உரிமையைச் சீதைக்கு நல்கி அவளிட்ட ஏவற் பணியைத் தான் செய்து
உய்ய வேண்டும் என எண்ணுகிறான்.                             31

3350.'உளைவுறு துயர் முகத்து ஒளி
     இது ஆம் எனின்,
முளை எயிறு இலங்கிடும்
     முறுவல் என்படும்?
தளை அவிழ் குழல் இவட்
     கண்டு தந்த என்