பக்கம் எண் :

இராவணன் சூழ்ச்சிப் படலம் 541

     கேட்டனென் - நீர் கூறிய செய்திகளை நான் முன்னரே
கேள்விப்பட்டுள்ளேன்; கண்டிலென் - (ஆனால் அவரை) நேரில்
பார்த்ததில்லை; கெழுவு கங்கை நீர் நாட்டிடை ஒரு முறை
நண்ணினேன் -
மிக்க நீர்ப் பெருக்குடைய கங்கை பாயும் மருத வள
நாட்டிடத்து ஒரு தடவை போயிருந்தேன்; மலர் வாள்தடங் கண்ணி-
தாமரை மலர் போன்றும் வாள் போலும் நீண்டகண்ணையுடையவளே!;
நீர் யாவர் மா மகள் -
நீவிர் யாருடையபெருமைக்குரிய மகள்?;
காட்டிடை அரும்பகல் கழிக்கின்றீர்என்றான் - இக் கொடிய காட்டில்
அரிய நாட்களைக் கழிக்கின்றீர்எனக் கேட்டான்.

     ஒரு முறை நண்ணினேன் என்பது முன்னர் இராவணன் திக்கு
விசயம் செய்த போது அயோத்தியை ஆண்ட அனரணியன்
என்பானைப் போரில் வீழ்த்தி நிந்தித்த போது அவன் தன் வழி
முறையில் பிறக்கின்றவனால் கொல்லப்படுமாறு சபித்த வரலாறு
நினைக்கப் பெறும். சீதையை நோக்கி வாள் தடங் கண்ணி என
விளிப்பது பெருந்தடங் கண்ணி பேசலுற்றாள் (3354) எனக் குறிக்கப்
பெற்றதும் ஒப்பிடற்குரியது. அயோத்தி அரண்மனையில் எல்லா
நலனும் துய்த்தவள் இந்தக் காட்டில் துன்பப்பட்டு, நாளைக்
கழிப்பதற்காக வருந்துபவன் போல் தன் மனத்தைக் காட்டிச் சீதையின்
பரிவைப் பெற இராவணன் முயலும் முயற்சி இதுவாம்.          38

3357.'அனக மா நெறி படர்
     அடிகள்! நும் அலால்,
நினைவது ஓர் தெய்வம் வேறு
     இலாத நெஞ்சினான்
சனகன் மா மகள்; பெயர்
     சனகி; காகுத்தன்
மனைவி யான்' என்றனள்,
     மறு இல் கற்பினாள்.

    மறு இல் கற்பினாள் - (அவன் சொற்களைக் கேட்ட) குற்றமற்ற
கற்புடைய சீதை; அனகமாநெறி படர் அடிகள்! - குற்றமில்லாத
சிறந்த அறவழியில் செல்லும் அடிகளே!; நும் அலால் ஓர் தெய்வம்
நினைவது வேறு இலாத நெஞ்சினான் -
உம்மைப் போன்றவர்களை
அல்லாமல் வேறு தெய்வத்தை நினையாத மனமுடையவன்; சனகன்
மாமகள் -
சனக மன்னனுடைய பெருமைக்குரிய மகளும்; சனகி
பெயர் -
சானகி எனும் பெயருடையவளும்; காகுத்தன் மனைவி
யான் என்றனள் -
காகுத்தன் மரபில் வந்த இராமனின் மனைவியும்
ஆகியவள் நான் எனக் கூறினாள்.

     மறு இல் கற்பினாள் என்பதற்கேற்ப முன்னரும் 'நீர் துடைத்த
கற்பினாள்' என வந்துளது (3351). இவள் நிலையை உணர்ந்த
திரிசடையும் சுந்தர காண்டத்தில் 'நவையில் கற்பினாய்' (5108) என
அழைப்பாள். ந + அகம் - அனகம். வடசொற்புணர்ச்சி; குற்றம்
அற்றது என்ற எதிர் மறைப் பொருளில் வந்தது. சனக மன்னன்
முனிவர்களையே தெய்வமாக மதித்து