பக்கம் எண் :

546ஆரணிய காண்டம்

மும்மையோர் பெருமையும்
     முற்றும் பெற்றியான்.

    வெம்மை தீர் ஒழுக்கினன் - கொடுமை தீர்ந்த நல்லொழுக்கம்
உடையவன்; விரிந்த கேள்வியன் - பரந்த வேதங்களை
உணர்ந்தவன்; செம்மையோன் - நடுநிலை உடையவன்; மன்மதன்
திகைக்கும் செவ் வியன் -
காமனே கண்டு ஏங்கும் அழகுடையவன்;
எம்மையோர் அனைவரும் இறைவர் என்று எணும் - எவ்வுலகில்
உள்ள எல்லோரும் தெய்வம் எனக் கருதும்; மும்மையோர்
பெருமையும் முற்றும் பெற்றியான் -
மூன்று முதல் தெய்வங்களின்
பெருமைகளும் முழுதும் பெற்ற பெருமை உடையவன்.

     கேள்வி - வேதம்; எழுதப்படாது ஓதியே உணரப்பெறும் நூல்.
சுருதி என்பதும் இப்பொருள் தருவதால் 'கற்றிலனாயினும் கேட்க'
என்பதற்கேற்ப சான்றோரிடம் நூல்களைக் கேட்டுணர்ந்தவன்
எனலுமாம். அழகின் கடவுள் மன்மதன் அவனே இராவணன்
அழகைக் கண்டு திகைப்பான் எனில்; இராவணன் அழகு
எல்லையற்றது என்பது குறிப்பு. மும்மையோர் திரிமூர்த்திகள் பிரமன்,
திருமால், சிவன். செம்மை - நற்பண்புமாம். செவ்வி - காளைப்
பருவமுமாம்.

     எம்மையோர் 'மை' விகுதி இடப்பொருளது. மும்மையோர் -
மூவர் இதில் 'மை' பகுதிப் பொருள் விகுதி.                      46

3365.'அனைத்து உலகினும் அழகு
     அமைந்த நங்கையர்
எனைப் பலர், அவன்தனது
     அருளின் இச்சையோர்;
நினைத்து, அவர் உருகவும்,
     உதவ நேர்கிலன்;
மனக்கு இனியாள் ஒரு
     மாதை நாடுவான்.

    அனைத்து உலகினும் - எல்லா உலகங்களிலுமுள்ள; அழகு
அமைந்த நங்கையர் எனைப்பலர் -
அழகுடைய பெண்களிற்
சிறந்தோர் மிகப் பலர்; அவன் தனது அருளின் இச்சையோர் -
அவனுடைய அருளைப் பெற விருப்பமுடையோர்; அவர் நினைத்து
உருகவும் உதவ நேர்கிலன் -
அப்பெண்கள் எண்ணி மனம்
உருகவும் அவர்க்கின்பம் கொடுக்க உடன்படாதவனாய்; மனக்கு
இனியாள் ஒரு மாதை நாடுவன் -
தன் உள்ளத்திற்கினியவளாம் ஒரு
மங்கையைத் தேடுகிறான்.

     நங்கையர் - பெண்களிற் சிறந்தார். அவருள்ளும் வடிவழகிற்
சிறந்தவர் என்பது தோன்ற அழகு அமைந்த நங்கையர் என்றார்.
எனைப் பலர் - எத்தனையோ பலர். மாதர் - என்பது காதல் எனும்
பொருள் கொண்ட உரிச் சொல், ஆகுபெயராய் விருப்பத்திற்குரிய
மகளிர் மேல் நின்றது.