பக்கம் எண் :

சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் 55

2609.மானே அனையாளொடு
     மைந்தனை அப்
பூ நேர் பொழிலின்
     புறமே நிறுவா,
ஆன்ஏறு என, ஆள் அரி
     ஏறு இது என,
தானே அவ் அகன்
     பொழில் சாருதலும்,

    மானே அனையாளொடு மைந்தனை - மான் போன்ற சீதையோடு
இளையவனாம் இலக்குவனையும்; அப் பூநேர் பொழிலின் புறமே நிறுவா-
அந்தப் பூக்கள் நிறைந்த சோலையில் வெளியே இருக்கச் செய்து; ஆன் ஏறு
என -
காளை போலவும்; ஆள் அரிஏறு என - வலிய ஆண் சிங்கம்
ஒப்பவன் எனவும்; தானே அவ்அகன் பொழில் சாருதலும் - தான்
மட்டும் அந்த அகன்ற (சரபங்கரின்) தவச் சாலையைஅடைதலும்; இது -
அசை.

     மைந்து- இளமை, மைந்தன் - இளையவனாம் இலக்குவனைக் குறித்தது.
இராமனை இலக்குவன் தந்தைஎனக் கொள்வதால் இவ்வாறு கூறலுமாம்.
மைந்தன் - வலிமை உடையவன் எனவும் கூறுவர். இராமன்நடைக்குக்
காளையும் ஆண் சிங்கமும் உவமையாக 'மாகமடங்கலும் மால்விடையும்...
நாண நடந்தான்'என வருவதைக் காணலாம் (697). ஆள் - மற்ற
விலங்குகளை அடக்கி ஆள்கின்ற எனவும் ஆம். நிறுவா- நிறுவி
உடன்பாட்டு வினையெச்சம்.                                      23

இந்திரன் இராமனைக் கண்டு துதித்தல்

2610.கண்தாம் அவை
     ஆயிரமும் கதுவ,
கண் தாமரைபோல் கரு
     ஞாயிறு எனக்
கண்டான், இமையோர்
     இறை-காசினியின்-
கண்தான், அரு நான்
     மறையின் கனியை.

    இமையோர் இறை - தேவர்க்கரசனாம் இந்திரன்; காசினியின்கண் -
பூமியின் மேல்; அருநான் மறையின்கனியை- அரிய நான்கு வேதங்களின்
இனிய பழமாம் இராமனை; கண் தாமரை போல் கருஞாயிறு என -
கண்கள் தாமரை இதழ் போலும் நிறம் கரிய சூரியனே போலும் என்று;
கண்தாம் அவை ஆயிரமும் கதுவ(க்)கண்டான் - தன் ஆயிரம்
கண்களுமே (இராமன் உருவில்)பொருந்தி ஊன்றப் பார்த்தான்; தான் -
அசை.