| | வீறிய பொழுது, பூளைவீ என வீவன் அன்றோ? |
சீறினன் உரை செய்வான் - கோபம் கொண்ட இராவணன் விடை கூறினான்; அச்சிறு வலிப் புல்லையோர்கட்கு - நீ கூறிய அந்த (விராதன் போன்ற) சிறு வலிமையுடைய அற்பர்களுக்கு; ஒரு மனிதன் ஈறு செய்தான் என்று எடுத்து இயம்பினாயேல் - ஒரு மனிதனாம் இராமன் முடிவைக் கொடுத்தான் என்று புகழ்ந்து கூறுவாய் என்றால்; நாளையே தேறுதி - அதன் முடிவை நாளையே நீ தெளிவாக அறிவாய்; அவ் இருபது திண்தோள் வாடை வீறிய பொழுது - அந்த இராவணனின் இருபது வலிய தோள்களின் பெருங்காற்று வீசிய காலத்து; பூளை வீ என வீவன் - சிறு பூளைப் பூப்போல அந்த மனிதன் அழிவான் : அன்றோ - ஓகாரம்; வினாப் பொருளில் வந்தது. முன்னைய பாடலில் சீற்றம் வைத்தான் என முடிந்தது, இதன் தொடக்கமாகச் சீறினை என அமைத்துள்ளமை எண்ணத்தக்கது. விராதன் முதலியோர் தன்னைச் சார்ந்தவர் எனினும், அவர்களைச் சிறு வலிப் புல்லியோர் என்றது தன்னையே இராவணன் தருக்கி நின்றமை புலனாம். பெரும் புயலில் சிறு பூளைப் பூ எதிர் நிற்க இயலாது. அது போல் இராவணனின் இருபது தோள் வீச்சிற்கு ஒரு மனிதன் ஆற்றான் என்று தற்பெருமை கொள்வது இங்கு வெளிப்படுகிறது. நுதல் விழிப் பொங்கு கோபம் சுடப் பூளை வீ அன்ன தன் அங்கம் வெந்து அன்று தொட்டு அனங்கனே ஆயினான்' எனச் சிவன் காமனை எரித்த வரலாற்றில் முன்னே இந்நூல் பூளைப் பூவைக் காட்டியுள்ளது (339) 'அன்றோ' தேற்றப் பொருளில் வந்த வினா எனவும்கொள்ளலாம். 59 | 3378. | 'மேருவைப் பறிக்க வேண்டின், விண்ணினை இடிக்க வேண்டின், நீரினைக் கலக்க வேண்டின், நெருப்பினை அவிக்க வேண்டின், பாரினை எடுக்க வேண்டின், பல வினை,-சில சொல் ஏழாய்! யார் எனக் கருதிச் சொன்னாய்?- இராவணற்கு அரிது என்?' என்றான். |
சிலசொல் ஏழாய் - சில சொற்கூறும் பேதைப் பெண்ணே! மேருவைப் பறிக்க வேண்டின் - மேருமலையைப் பெயர்த்தெடுக்க விரும்பினாலும்; விண்ணினை இடிக்க வேண்டின் - வானத்தை இடிக்க விரும்பினாலும்; நீரினைக் கலக்க வேண்டின் - கடல்களிலுள்ள நீரைக் கலக்க விரும்பினாலும்; நெருப்பினை அவிக்க வேண்டின் - வடவா முகாக்கினியை அவிக்க விரும்பினாலும்; பாரினை எடுக்க வேண்டின் - உலகத்தைப் பெயர்த்தெடுக்க விரும்பினாலும்; பலவினை - இப்படிப்பட்ட பல அரிய செயல்களுள்; இராவணற்கு அரிது என் - இராவணன் செய்வதற்கு முடியாத செயல் எது?; |