பக்கம் எண் :

558ஆரணிய காண்டம்

     அரிவையும் - சீதையும்; இவர் இருவினை துறந்த மேலோர்
அல்லர் கொல் என்று எண்ணி -
இத்தவ வேடம் கொண்டவர்
நல்வினை தீவினை எனும் இருவேறுபட்ட செயல்களையும் விட்டு
நீங்கிய துறவி அல்லர் என நினைத்து; ஐயம் எய்தா - சந்தேகம்
கொண்டு; ஆர் இவன் தான் என்று ஒன்றும் தெரிவு
அருநிலையளாக -
இத்தகையோன் யார் என எதுவும் அறிதற்கு
முடியாத நிலையுடையவளாகி நிற்க; தீவிடத்து அரவம் - கொடிய
நஞ்சுள்ள பாம்பு; தானே உருகெழு சீற்றம் பொங்கி - தானாக
அச்சமூட்டும் வகையில் கோபம் மேற்கிளம்ப; பணம் விரித்து
உயர்ந்தது ஒத்தான் -
தன் படம் விரித்து எழுந்து உயர்ந்தது போல
(இராவணன்) விளங்கினான்.

     இராவணனின் துறவித் தோற்றமே சீதையின் உள்ளத்தில்
ஐயமின்றிப் பதிந்திருந்ததால் 'மேலோர்' என்ற நினைவே முதலில்
வருகிறது. பின்னர் அவனது உருவ மாற்றத்தைக் கண்டு 'மேலோர்
அல்லர் கொல்' என ஐயுறுகிறாள். அப்போதும் 'யார்' என எண்ணம்
கொண்டாளே ஒழிய அரக்கர் மாறுவேடமிட்டு வந்தார் என
நினைக்கவில்லை. இராவணன் பத்துத் தலைகளுடன் இருபது
கைகளுடன் சினந்தோங்கிய நிலையில் எழுந்த தோற்றம் பல
தலைகளையுடைய நச்சுப் பாம்பு தன் படம் விரித்து எழுந்தது போல்
தோன்றுகிறது.                                         63

3382. ஆற்ற வெந்துயரத்து அன்னாள் ஆண்டு
     உற்ற அலக்கண் நோக்கின்,
ஏற்றம் என் நினைக்கல் ஆகும்? எதிர்
     எடுத்து இயம்பல் ஆகும்
மாற்றம் ஒன்று இல்லை; செய்யும்
     வினை இல்லை; வரிக்கல் ஆகாக்
கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர்
     என, குலைவு கொண்டாள்.

    ஆற்ற வெந்துயரத்து அன்னாள் ஆண்டு உற்ற அலக்கண்
நோக்கின் -
(இராமனுக்குற்ற) மிகக் கொடிய துயரத்தை அடைந்துள்ள
சீதை அப்போது (இராவணன் உருவமாற்றத்தால்) அடைந்த
துன்பத்தைக் கருதின்; ஏற்றம் என் நினைக்கல் ஆகும் -
அதனைவிட மிக்க துன்பம் வேறு எதை நினைக்க முடியும்?; எதிர்
எடுத்து இயம்பல் ஆகும் மாற்றம் ஒன்று இல்லை -
இதற்கு
ஒப்பாக வேறு சொல்லக் கூடிய சொல் ஒன்றும் இல்லாமல் போயிற்று;
செய்யும் வினை இல்லை - அவள் அவனைவிட்டுத் தப்பும் செயலும்
தெரியவில்லை; வரிக்கல் ஆகாக் கூற்றம் வந்து உற்ற காலத்து
உயிர் என(க்) குலைவு கொண்டாள் -
கட்டமுடியாத யமன் வந்து
சேர்ந்த போது உயிர் நடுங்குவது போல நடுக்கம் அடைந்தாள்.

     ஆற்ற - மிக அலக்கண் - துன்பம் சஞ்சலமானகண். துன்பம்
வரும்போது கண் கலங்கும்; அதனால் அலக்கண் என்பது
துன்பத்தைக் குறித்தது. காரியத்தின் பெயர் காரணத்திற்கு வந்த
இலக்கணை. சீதை பட்ட துன்பத்தைக் கூறச் சொற்கள்
கிடைக்கவில்லை. மாற்று வினை செய்ய வழியும் தெரிய வில்லை.
வரித்தல் - கட்டுதல். கூற்றத்திற்கு உயிர்களின்