பக்கம் எண் :

568ஆரணிய காண்டம்

மறுக்கவே அவன் பாதுகையைப் பெற்று நந்திக் கிராமத்திலிருந்த
பரதனை 'மறுஏதும் இலாப் பரதா' என்கிறாள். பரதனை நீங்காத
சத்துருக்கனையும் 'இளையோய்' என்றாள். இத்தகைய குற்றமற்ற
நால்வரும் தனக்கேற்பட்ட தீங்கை நீக்க வராததால் பழி
பூணுவார்களோ என அஞ்சுகிறாள் சீதை.                        77

3396.'கோதாவரியே! குளிர்வாய், குழைவாய்!
மாதா அனையாய்! மனனே தெளிவாய்;
ஓதாது உணர்வாருழை, ஓடினை போய்
நீதான் வினையேன் நிலை சொல்லலையோ?

    கோதாவரியே - கோதாவரி எனும் ஆறே!; குளிர்வாய் -
குளிர்ந்த தன்மை உடையாய்; குழைவாய் - இளகும் இயல்புடையாய்;
மாதா அனையாய் - தாயைப் போன்றவளே!; மனனே தெளிவாய் -
குற்றமற்ற தெளிந்த மனமுடையாய்; ஓதாது உணர்வார் உழை -
ஓதாமலே எல்லா நூல்களையும் உணர்ந்துள்ள என் கணவரிடத்து;
ஓடினைபோய் - ஓடிச் சென்று; வினையேன் நிலை நீ தான்
சொல்லலையோ -
துன்பமுற்ற தீவினையேனாகிய என் நிலையை
நீயே போய்ச் சொல்லமாட்டாயா?

     குளிர்தலும் குழைதலும் நீரின் தன்மை. அவற்றைப் பெற்ற
கோதாவரி ஆறு தன் துன்பத்தை இராமனிடம் கூறாதா எனச் சீதை
ஏங்குகிறாள். ஓடுதல் ஆற்றின் இயல்பு. குளிர் பண்பும் குழையும்
பண்பும் தாயன்பும் கொண்ட கோதாவரி தன் ஓட்டத்தின் போக்கைத்
திசை மாற்றி இராமலக்குவரை நோக்கி ஓடித் தெரிவிக்கக் கூடாதா
என்று பேதைச் சீதை அரற்றுகிறாள். 'புவியினுக்கு' எனும் பாடலில்
இப்பண்பு முன்னரே கூறப் பெற்றதாம் (2732) ஆற்றைத் தாயாகப்
படைப்பது கவிமரபு இதனைச் 'சரயு என்பது தாய் முலை அன்னது'
(23) என வந்த தொடரால் அறியலாம். ஓதாதுணரும் நிலையை
முன்னர் விராதன் 'அன்னம் ஆய் அருமறைகள் அறைந்தாய் நீ,
அவை உன்னை முன்னம் ஆர் ஓதுவித்தார்' (2575) எனத் துதித்தலில்
காணலாம். சீதை புலம்பியது போலவே இராமனும் அவளைக் காணாது
புலம்பியது ஒப்பிடற்பாலது. (3731 - 3740).

     மனன் - போலி.                                       78

3397.'முந்தும் சுனைகாள்! முழை வாழ் அரிகாள்!
இந்தந்  நிலனோடும் எடுத்த கை நால்-
ஐந்தும், தலை பத்தும், அலைந்து உலையச்
சிந்தும்படி கண்டு, சிரித்திடுவீர்.

    முந்தும் சுனைகாள் - என் முன்னே தோன்றும் மலை
ஊற்றுக்களே!; முழை வாழ் அரிகாள் - மலைக் குகையில் வாழும்
சிங்கங்களே!; இந்தந் நிலனோடும் - நானிருந்த இந்தத் தரையோடும்;
எடுத்த கை நால் ஐந்தும் - பெயர்த்தெடுத்த இருபது கைகளையும்;
தலைபத்தும் - பத்துத் தலைகளையும்; அலைந்துலையச் சிந்தும்படி
கண்டு சிரித்திடுவீர் -
(இராமன் அம்புகளால்) அலைவுற்றுச் சிதறி
அழியச் சிந்திவிடுவதைப் பார்த்து நீங்கள் சிரிப்பீர்கள்!.