பக்கம் எண் :

இராவணன் சூழ்ச்சிப் படலம் 571

சூர்ப்பணகையின் முலையையும் மூக்கையும் வெட்டியவர் காட்டிலே
உள்ளவராம் மனிதர்கள்; என்ற வார்த்தை கேட்டும் - என்று இச்
சொற்களைக் கேட்டும்; இம்மாயம் செய்தது அச்சத்தின் கிளர்ச்சி
அன்றோ -
இந்த மாயையைச் செய்தது பயத்தின் மிகுதியால்
அல்லவா என்று; மீட்டும் ஒன்று உரை செய்வாள் - (அந்த
இராவணனைப் பார்த்து) மறுபடியும் ஒரு வார்த்தை சொல்வாள். மற்று-
அசை.

     விரைவில் கொல்லல் - கரதூடணரையும் எண்ணற்ற போர்
வீரரையும் ஒரு முகூர்த்த நேரத்தில் இராமன் கொன்றதைக்
குறிப்பிட்டதாம். சூர்ப்பணகையின் உறுப்புகளை அறுத்தது
இராவணனுக்கு அவமானம் தரும் செயலாகும். இவ்விரு
செயல்களையும் செய்த மானிடரை நேரில் மோதி எதிர்த்துப் போர்
செய்யாமல் வஞ்சனையாக என்னைக் கவர்ந்தது அச்சத்தின் விளைவு
எனச் சீதை இராவணனின் வீரத்தின் குறையைச் சுட்டினாள்.
'வீரனேல்' என்ற சொல் இராவணன் வீரன் அல்லன் என்ற
கருத்தினைக் குறித்தது. வீரனுக்கு வஞ்சகச் செயல் ஒவ்வாது.
பின்னரும் இராவணனை நோக்கிச் சீதை 'உங்கை மூக்கும் உம்பியர்
தோளும் தாளும் சின்னபின்னங்கள் செய்த அதனை நீ சிந்தியாயோ?
(5202) எனச் சுந்தர காண்டத்தில் கூறுவதும் நோக்கற்குரியது.

     மற்று - அசைச்சொல்.                                  82

அரக்கன் மறுமொழியும் சீதையின் எதிர்மொழியும்

3401.மொழிதரும் அளவில், 'நங்கை! கேள் இது;
     முரண் இல் யாக்கை
இழிதரு மனிதரோடே யான் செரு
     ஏற்பன் என்றால்,
விழி தரு நெற்றியான்தன் வெள்ளி
     வெற்பு எடுத்த தோட்குப்
பழி தரும்; அதனின் சாலப் பயன் தரும்,
     வஞ்சம்' என்றான்.

    மொழிதரும் அளவில் - (இவ்வாறு சீதை) சொன்ன அளவில்;
(இராவணன் அவளை நோக்கி); நங்கை - பெண்ணே!; இது கேள் -
இதனைக் கேட்பாயாக; முரண் இல் யாக்கை இழிதரு மனிதரோடே
யான் செரு ஏற்பன் என்றால் -
வலியற்ற உடலை உடைய இழிவான
மனிதர்களுடன் நான் போர் செய்ய முனைந்தால்; விழிதரு நெற்றி
யான் தன் வெள்ளி வெற்பு எடுத்த தோட்கு -
நெற்றியில்
கண்ணுடைய சிவபெருமானின் கயிலை மலையை எடுத்த
தோள்களுக்கு; பழி தரும் - பழிப்பை உண்டாக்கும்; அதனின்
வஞ்சம் சாலப்பயன் தரும் என்றான் -
அதைக் காட்டிலும் இந்த
வஞ்சனைச் செயல் மிகுந்த பயனைக் கொடுக்கும் எனக் கூறினான்.

     வலிமையுள்ள இராவணன் வலிமையற்ற மனிதர்களோடு
போரிடுவது பழியைத்தரும். அதுமட்டுமன்று; சிவனின் கயிலை
மலையை எடுத்த