3414. | 'எல்லா உலகங்களும், இந்திரனும், அல்லாதவர் மூவரும், அந்தகனும், புல்வாய் புலி கண்டதுபோல்வர் அலால்; வில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ? |
எல்லா உலகங்களும் - மூவுலகில் உள்ளவர் அனைவரும்; இந்திரனும் - தேவர் தலைவன் ஆகிய இந்திரனும்; அல்லாதவர் மூவரும் - இவர்கள் அல்லாது (உயர்ந்த) மும்மூர்த்திகளும்; அந்தகனும் - யமனும்; புல்வாய் புலிகண்டது போல்வர் அலால் - (இந்த இராமலக்குவரைக் கண்டபோது) மான்கள் புலியைக் கண்டது போல் (அஞ்சி நடுக்கம் அடைவரே) அல்லாமல்; வில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ - வில்தொழில் வித்தகனாகிய இராமனை வெல்லுதற்கு உரிய வலிமை உடையர் ஆவரோ? ஆகார். உலகத்தவரும், இந்திரனும், மூவரும் எமனும் வில்லாளனைக் கண்டு மான் புலியைக் கண்டது போல் அஞ்சுவார்களே யல்லாமல் அவனை வெல்லும் வலிமை உடையர் அல்லர் என்பதாம். அந்தகன் - அழிவைச் செய்பவன், புல் வாய் - மான், மிடுக்கு - வீரம், வலிமை. மூவர் - தொகைக் குறிப்புச் சொல். புல்வாய் - வேற்றுமைத்தி தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, காலப் போக்கில் காரண இடுகுறிப்பெயராயிற்று. 12 3415. | 'இம்மைக்கு, உறவோடும் இறந் தழியும் வெம்மைத் தொழில், இங்கு, இதன்மேல் இலையால்; அம்மைக்கு, அரு மா நரகம் தருமால்; எம்மைக்கு இதம் ஆக இது எண்ணினை, நீ? |
இம்மைக்கு - இந்தப் பிறப்பில்; உறவோடும் இறந்தழியும் வெம்மைத் தொழில் - உறவினர்களுடன் இறந்து அழிந்து படுவதற்குக் காரணமான கொடுமையான தொழில்; இங்கு இதன் மேல் இலையால் - இப்பொழுது (நீ செய்த) இச்செயலுக்கு மேல் வேறு ஒன்றும் இல்லை; அம்மைக்கு - (இச்செயல்) மறுமையில்; அருமாநரகம் தருமால் - (உனக்கு) தாங்கரிய பெரிய நரகத்தைத் தரும்; இது எம்மைக்கு இதம் ஆக - (ஆகையால் இச்செயலை) எப்பிறவிக்கு நன்மையாக; நீ எண்ணினை - நீ எண்ணினாய்? இப்பிறவியில் உறவினருடன் இறந்துபடவும் மறுமையில் பொறுத்தற்கரிய நரகினை அடையவும் உரிய இத் தீச் செயலை எப்பிறவிக்கு நன்மை தரும் எனக் கருதி நீ செய்தாய்? இம்மை - இப்பிறவி, அம்மை - மறுமை, எம்மை - எப்பிறவிக்கு. இலை - இடைக்குறை, மாநரகம் - உரிச்சொற்றொடர். இலையால் - தேற்றப் பொருளில் ஆல் வந்தது. ஆல் - அசை.13 |