பக்கம் எண் :

சடாயு உயிர் நீத்த படலம் 581

3414.'எல்லா உலகங்களும், இந்திரனும்,
அல்லாதவர் மூவரும், அந்தகனும்,
புல்வாய் புலி கண்டதுபோல்வர் அலால்;
வில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ?

    எல்லா உலகங்களும் - மூவுலகில் உள்ளவர் அனைவரும்;
இந்திரனும் - தேவர் தலைவன் ஆகிய இந்திரனும்; அல்லாதவர்
மூவரும் -
இவர்கள் அல்லாது (உயர்ந்த) மும்மூர்த்திகளும்;
அந்தகனும் - யமனும்; புல்வாய் புலிகண்டது போல்வர் அலால் -
(இந்த இராமலக்குவரைக் கண்டபோது) மான்கள் புலியைக் கண்டது
போல் (அஞ்சி நடுக்கம் அடைவரே) அல்லாமல்; வில்லாளனை
வெல்லும் மிடுக்கு உளரோ -
வில்தொழில் வித்தகனாகிய இராமனை
வெல்லுதற்கு உரிய வலிமை உடையர் ஆவரோ? ஆகார்.

     உலகத்தவரும், இந்திரனும், மூவரும் எமனும் வில்லாளனைக்
கண்டு மான் புலியைக் கண்டது போல் அஞ்சுவார்களே யல்லாமல்
அவனை வெல்லும் வலிமை உடையர் அல்லர் என்பதாம். அந்தகன் -
அழிவைச் செய்பவன், புல் வாய் - மான், மிடுக்கு - வீரம், வலிமை.
மூவர் - தொகைக் குறிப்புச் சொல். புல்வாய் - வேற்றுமைத்தி
தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, காலப் போக்கில்
காரண இடுகுறிப்பெயராயிற்று.                                 12

3415.'இம்மைக்கு, உறவோடும்
     இறந் தழியும்
வெம்மைத் தொழில், இங்கு,
     இதன்மேல் இலையால்;
அம்மைக்கு, அரு மா
     நரகம் தருமால்;
எம்மைக்கு இதம் ஆக
     இது எண்ணினை, நீ?

    இம்மைக்கு - இந்தப் பிறப்பில்; உறவோடும் இறந்தழியும்
வெம்மைத் தொழில் -
உறவினர்களுடன் இறந்து அழிந்து
படுவதற்குக் காரணமான கொடுமையான தொழில்; இங்கு இதன் மேல்
இலையால் -
இப்பொழுது (நீ செய்த) இச்செயலுக்கு மேல் வேறு
ஒன்றும் இல்லை; அம்மைக்கு - (இச்செயல்) மறுமையில்;
அருமாநரகம் தருமால் - (உனக்கு) தாங்கரிய பெரிய நரகத்தைத்
தரும்; இது எம்மைக்கு இதம் ஆக - (ஆகையால் இச்செயலை)
எப்பிறவிக்கு நன்மையாக; நீ எண்ணினை - நீ எண்ணினாய்?

     இப்பிறவியில் உறவினருடன் இறந்துபடவும் மறுமையில்
பொறுத்தற்கரிய நரகினை அடையவும் உரிய இத் தீச் செயலை
எப்பிறவிக்கு நன்மை தரும் எனக் கருதி நீ செய்தாய்? இம்மை -
இப்பிறவி, அம்மை - மறுமை, எம்மை - எப்பிறவிக்கு. இலை -
இடைக்குறை, மாநரகம் - உரிச்சொற்றொடர். இலையால் - தேற்றப்
பொருளில் ஆல் வந்தது. ஆல் - அசை.13